அபிவிருத்தியை நோக்கிய மூலோபாயத் திட்டம் தொடர்பில் நாணய நிதிய பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கம்
கடன் மறுசீரமைப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்கால கலந்துரையாடலாக இது நடத்தப்பட்டது.

பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை அதிலிருந்து விடுவித்து அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கான மூலோபாயத் திட்டம் அரசாங்கத்திடமிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் 07-10-2025 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக நடத்தப்படும் ஐந்தாவது மீளாய்வின் இடைக்கால கலந்துரையாடலாக இது நடத்தப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் ஆதரவை தான் பெரிதும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மறுமலர்ச்சியை அடையக்கூடிய நாடாக இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு, சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்குகளைத் தாண்டிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் முறையான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார மறுமலர்ச்சி இலக்கை அடைவதற்கு, அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக முதலீட்டிற்கு உகந்த சூழலை நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளதுடன், எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.