புதிய கல்வி சீர்திருத்தத்தை எதிர்க்கட்சி தடுக்கவில்லை: எதிர்க்கட்சித் தலைவர்
தரம் 6 ஆங்கில பாட விடயதான தயாரிப்பு பணிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களோ எனது அதிகாரிகள் குழுவோ பங்கேற்கவில்லை.
கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை எந்த வகையிலும் எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தவில்லை. பாட உள்ளடக்கங்கள் தயாரிப்பிலும், அது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும் எதிர்க்கட்சியின் எவ்வித பங்களிப்பும் இல்லா நிலையில், சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு நாமே காரணம் எனக் கூறுவது அடிப்படையற்றதாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்குமாறு கோருவதற்காக பெற்றோர்கள் குழுவொன்று 24-01-2026 அன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்திருந்தது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கல்வி சீர்திருத்தங்களை முதலில் நாமே முன்வைத்தோம். அந்த வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மீளப்பெறுமாறோ அல்லது நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றோ நாம் கூறவில்லை. கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தடையாகவுள்ளதாகக் கூறப்படுவது நம்பக் கூடிய விடயமல்ல.
நாட்டில் கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சியாக இருந்தாலும் சக்வல வேலைத்திட்டத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நவீன வகுப்பறை உபகரணங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தோம்.
எதிர்க்கட்சியால் கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்துவதை நிறுத்த முடியுமா? அதிபர்கள், ஆசிரியர்கள் அல்லது மாணவர்களை வீதிக்கிறக்கு இவற்றை எதிர்க்குமாறு நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. இவர்களை வீதிக்கிறக்காமல் இந்த நடவடிக்கைகளை தடுக்க முடியாது. நாம் அவ்வாறு செய்யவுமில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரது முகநூல் பதிவில் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதில் தரம் 6க்கான சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவரே தெரிவித்துள்ளார். எனவே சீர்திருத்தங்களை ஒத்தி வைத்தது நாம் அல்ல, ஜனாதிபதியே என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அவை காலம் தாழ்த்தப்பட்டுள்ளமைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதனை முறையாக முன்னெடுத்திருந்தால் இன்று இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்பட்டிருக்காது.
தரம் 6 ஆங்கில பாட விடயதான தயாரிப்பு பணிகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்களோ எனது அதிகாரிகள் குழுவோ பங்கேற்கவில்லை. இது தயாரிக்கப்படும் போது 12 சந்தர்ப்பங்களில் சோதனைக்குட்படுத்தப்படுகிறது. அவ்வாறிருந்தும் பொறுத்தமற்ற ஒரு இணையதளத்தின் முகவரி எவ்வாறு பாட நூலில் உள்ளடக்கப்பட்டது? இதற்கும் எதிர்க்கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனும் போது எவ்வாறு சீர்திருத்தங்கள் எம்மால் தடைபட்டுள்ளதாகக் கூற முடியும்? எனவே இதனை பெற்றோர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.





