பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்க சிறந்த திட்டம்: பொலிஸ் மா அதிபர்
முப்படைகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் இந்தக் குற்றங்களை அடக்குவதற்கு தாம் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
கண்டியில் 17-08-2025 அன்று மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
முப்படைகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் இந்தக் குற்றங்களை அடக்குவதற்கு தாம் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சில பாதாள உலக குழு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சில அரசியல் ஆசீர்வாதங்களையும் சில பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவையும் பெற்றுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை நிலைநாட்டுவதில் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை என்றும், அரசியல் சூழல் மிகவும் நன்றாக உள்ளது என்றும் கூறிய பொலிஸ்மா அதிபர், எந்தவொரு குற்றத்தையும் மறைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ தன்னிடமிருந்து ஒருபோதும் உத்தரவுகள் வராது என்றும் கூறினார்.
"துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக, சந்தேக நபர்களை விசாரித்து கைது செய்துள்ளோம். மேலும் நாங்கள் மிகவும் நுட்பமான திட்டத்துடன் முன்னேறி வருகிறோம். மற்ற நிறுவனங்கள், குறிப்பாக முப்படைகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் இதைச் செய்ய ஒரு திட்டம் உள்ளது.
போதைப்பொருள் கடத்தல் நேற்று இன்று நடக்கவில்லை, அதேபோன்று பாதாள உலகக் குழு நடவடிக்கைகளும் நேற்று தோன்றியதல்ல. அதற்காக சில அரசியல் ஆசீர்வாதங்கள் பெறப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் அதிகாரிகளிடமிருந்து ஆதரவு பெறப்பட்டுள்ளன. முப்படைகளைச் சேர்ந்தவர்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டனர், போதைக்கு அடிமையானவர்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டனர்.
எனவே இந்த நடவடிக்கைகள் வெளிநாடுகளுக்குச் சென்ற கோழைகள் குழுவால் மேற்கொள்ளப்படுகின்றன. இது குறித்து சர்வதேச சமூகத்துடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்." என்றார்.





