வியட்நாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பெருமிதம் - ஜனாதிபதி அநுரகுமார
இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுமே தங்களது அழிவுகரமான மோதல்களையும், பிராந்தியத்தைப் பிளவுபடுத்தும் முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
வியட்நாமை வெறும் ஒரு நாடாக மாத்திரமன்றி, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பெருமிதமாகவும் பொருளாதார மாற்றத்தின் வாழும் சாட்சியாகவும் இலங்கை பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 2030 ஆம் ஆண்டளவில் இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதே தமது பிரதான இலக்கு என்றும் சுட்டிக்காட்டினார்.
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் பொதுச்செயலாளருமான டோ லாமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு 08-05-2026 அன்று ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான டோ லாம் அவர்களே,வியட்நாம் தூதுக்குழுவின் உறுப்பினர்களாக வருகை தந்துள்ள கௌரவமிக்க பிரமுகர்களே, ஏனைய பிரதிநிதிகளே, ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நண்பர்களே,
முதலாவதாக, இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்கள் சார்பாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியுமான டோ லாம் அவர்களையும், அவருடன் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரச பயணத்தில் இணைந்து கொண்டுள்ள வியட்நாமின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவையும் நான் மிகவும் அன்போடு வரவேற்கிறேன்.
மதிப்பிற்குரிய வியட்நாம் பிக்குவான வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரரால் வழிநடத்தப்பட்ட உலகளாவிய அமைதிக்கான நடைபயணம் இலங்கையினூடாகவும் பயணித்திருந்ததுடன், அது எமது இரு நாடுகளுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நெருக்கமான உறவுகளை மேலும் எடுத்துக்காட்டிய ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. இன்று வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தந்திருப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மேலும் வலுவடைகின்றன.
உலக அரசியல் வரைபடத்தில் வியட்நாமை நாம் வெறும் மற்றொரு நாடாக மட்டும் பார்க்காமல், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தளராத பெருமிதமாகவும், அதேபோன்று பொருளாதார மாற்றத்தின் ஒரு வாழும் சாட்சியாகவும் பார்க்கிறோம் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகம் அளித்த ஒரு வரலாற்றுப் பின்னணி வியட்நாமுக்கு உள்ளதுடன், அது உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அளப்பரிய சவால்களுக்கு மத்தியில், தைரியத்துடனும் ஹோ சி மின் போன்ற சிறந்த தலைவர்களின் வழிகாட்டலின் கீழும் வியட்நாம் கட்டியெழுப்பப்பட்ட விதம் ஆச்சரியத்திற்குரியதாகும். இன்னல்களைக் கடந்து வந்ததற்கான வாழும் சான்றுகளுடன், தற்காலத்தில் தென்கிழக்காசிய நாடாக இருந்த நிலையிலும் கூட ஒரு பிரதான உற்பத்தி மையமாக வியட்நாம் உருவெடுத்துள்ள விதம் குறித்து வியட்நாமுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வியட்நாமின் ஜனாதிபதியாக டோ லாம் பதவியேற்றதன் பின்னர், தெற்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளும் முதலாவது அரச பயணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இலங்கை போன்ற சுதந்திரத்தை மதிக்கும் நாடு, வியட்நாம் போன்ற வரலாற்றைக் கொண்ட நாட்டுடன் இவ்வாறு நெருங்கிய உறவை பேணுவது மகிழ்ச்சியான விடயம் என்பதோடு இதனை எமது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான நட்புறவையும் நீண்டகால உறவையும் பிரதிபலிக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் தனித்துவமான தருணமாக நாம் கருதுகிறோம்.
அதே வேளை, வியட்நாமின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையும் அதேபோன்று வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் பதவியேற்றமைக்காக ஜனாதிபதி டோ லாமிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஜனாதிபதி டோ லாமிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம், அவரது தலைமைத்துவத்தின் மீது அந்நாட்டு மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தெளிவான சான்றாகும்.அவரது தொடர்ச்சியான வழிகாட்டலின் கீழ், ஏற்கனவே வளமான நாடாக உருவெடுத்து வரும் வியட்நாம் இன்னும் உயர்ந்த நிலையை எட்டும் என்பது எனது நம்பிக்கையாகும்.
ஜனாதிபதி டோ லாம் அவர்களின் இந்த விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.ஏனெனில், எமது இருதரப்பு உறவுகளின் முதிர்ச்சி, பலம் மற்றும் எதிர்காலத் திறன்களைப் பிரதிபலிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை விரிவான கூட்டாண்மை வரை உயர்த்துவதற்கு இலங்கையும் வியட்நாமும் இன்றைய தினம் உடன்பட்டுள்ளன.
சற்று நேரத்திற்கு முன்னர், வியட்நாம் ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் விரிவான மற்றும் பயனுள்ள இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவுகளின் நிலை குறித்து நாம் மீளாய்வை மேற்கொண்டோம். அதேபோன்று, பரந்த அளவிலான பல்வேறு துறைகளின் கீழ் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் நாம் கலந்துரையாடினோம்.
பொருளாதார ரீதியாக, உற்பத்தித்துறை, ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைதல் ஆகியவற்றில் வியட்நாம் அடைந்துள்ள சிறப்பான சாதனைகளைப் பாராட்டினேன். அத்துடன், அண்மைக்கால சவால்களுக்குப் பின்னர் இலங்கை அடைந்துள்ள சிறப்பான பொருளாதார முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினேன்.
இதனை எமது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாக இரு நாடுகளும் கருதுகின்றன. 2030 ஆம் ஆண்டளவில் இருதரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதற்கான இரு நாடுகளின் பொதுவான இலக்கின் அடிப்படையில், தற்போதுள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்தக்கூடிய வழிகள் குறித்தும், மேலும் சமநிலையான வர்த்தக உறவை எட்டும் நோக்கில் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் முதலீட்டுச் சூழல் மற்றும் அதன் மூலோபாயத் திறன்கள் மீது கொண்டுள்ள பலத்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், ஐம்பது பிரதிநிதிகளைக் கொண்ட வியட்நாம் வர்த்தகக் குழுவை இந்த விஜயத்தில் இணைத்துக் கொண்டமைக்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.இன்று பிற்பகல் அந்த வர்த்தகத் தூதுக்குழுவினரை உள்ளடக்கிய பொருளாதார மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, விநியோகம், உள்கட்டமைப்பு அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் உற்பத்தித்துறை உள்ளிட்ட இலங்கையின் பிரதான துறைகளில் முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகளை ஆராயுமாறு வியட்நாம் வணிக நிறுவனங்களுக்கு நான் அழைப்பு விடுத்தேன்.இந்து சமுத்திரத்தில் இலங்கையின் மூலோபாய அமைவிடமும், வளர்ந்து வரும் பொருளாதார நோக்கு என்பன இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளுக்கான கணிசமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
வியட்நாம் விமானச் சேவை மற்றும் 'வியட்ஜெட் எயார்' (Vietjet Air) ஆகியவை கொழும்பிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் மற்றும் ஹனோய் நகரங்களுக்கு இடையே இந்த ஆண்டு முதல் நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கத் தீர்மானித்தமைக்கு இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. இது சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மட்டுமன்றி, வர்த்தகம், முதலீடு மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான நேரடித் தொடர்புகளை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
வலு சக்தித் துறை ஒத்துழைப்பு என்பது எமது கலந்துரையாடலில் ஆராயப்பட்ட மற்றொரு முக்கிய துறையாகும்.இலங்கை தூய்மையான மற்றும் நிலையான வலுசக்தி மூலங்களை நோக்கிய மாற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக, குறிப்பாக சூரிய மற்றும் காற்றாலை வலுசக்தித் துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாம் கலந்துரையாடினோம். மின்சார இயக்கம் மற்றும் மின்சார வாகன உற்பத்தித் துறையில் நிலவும் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் போன்ற வளர்ந்து வரும் புதிய துறைகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தினோம்.
நமது நாடு டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதால், இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தோம். இத்துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணுவது, புத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் நமது மக்களுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.
விவசாயத்துறை எமது இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமான ஒரு துறையாகும். விவசாய நவீனமயமாக்கல், இயந்திரமயமாக்கல் மற்றும் ஏற்றுமதிப் போட்டித்தன்மை ஆகிய துறைகளில் வியட்நாம் அடைந்துள்ள ஈர்ப்பு மிக்க முன்னேற்றங்கள் குறித்து நாம் கலந்துரையாடினோம். விவசாயத் துறையின் உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் அபிவிருத்தி மற்றும் அறுவடைக்கு பின்னரான முகாமைத்துவம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாம் உடன்பாடு கண்டுள்ளோம்.
இன்றைய தினம் வியட்நாம் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 100 மெட்ரிக் டொன் யூரியா மற்றும் சூப்பர் பொஸ்பேட் உரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இது தொடர்பாக வியட்நாம் மக்களுக்கு இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் நாம் கலந்துரையாடினோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான இரு நாடுகளின் பொதுவான அர்ப்பணிப்பை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், பயிற்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் பங்களிப்பு போன்ற துறைகளில் எமக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ளவும் இணக்கம் தெரிவித்தோம்.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு, இரு நாடுகளின் கலாசாரத் தொடர்புகளும் மக்களுக்கிடையேயான கலாசாரப் பிணைப்புகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. நவீன வியட்நாமின் தந்தை எனக் கருதப்படும் ஜனாதிபதி ஹோ சி மின் அவர்கள் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்திருப்பது எமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவின் அடையாளமாகத் திகழ்கிறது.
ஜனாதிபதி டோ லாம் அவர்களுடன் இணைந்து ஹோ சி மின் அவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கும், கொழும்பு பொது நூலகத்தில் அமைந்துள்ள ஹோ சி மின் வளாகத்தை விரிவுபடுத்தும் பணிகளைத் தொடங்கும் நிகழ்விலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன்.
எனக்கும் ஜனாதிபதி டோ லாம் அவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம், பொலிஸ் ஒத்துழைப்பு, தகவல் தொடர்பு மற்றும் மத, கலாசார ஒத்துழைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய பல இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுமே தங்களது அழிவுகரமான மோதல்களையும், பிராந்தியத்தைப் பிளவுபடுத்தும் முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. நாம் இரு நாடுகளுமே ஆசியாவில் வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளாக இருப்பதுடன், ஒரே அளவான தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளோம். வியட்நாமின் நான்காவது பெரிய வர்த்தக பங்காளராக இலங்கை திகழ்கிறது. இரு நாடுகளும் சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் மூலோபாய ரீதியாக அமைந்திருப்பது, இருதரப்பு மற்றும் பன்முக வர்த்தகத்திற்கும் அத்துடன் கூட்டு வணிக முயற்சிகளுக்கும் தனித்துவமானதொரு சாதகமான நிலையை வழங்குகிறது. இவை அனைத்தையும் எமது இரு நாடுகளினதும் அபிவிருத்திக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இறுதியாக, இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரச பயணத்தை மேற்கொண்டமைக்காகவும், நமது நாட்டுடன் பேணி வரும் தொடர்ச்சியான நட்புறவிற்காகவும் ஜனாதிபதி டோ லாம் அவர்களுக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டங்களை நோக்கி நகர்வதன் மூலம், இரு நாடுகளுக்கும் பெருமைமிக்கதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பதை நினைவூட்டுகிறேன். இலங்கை - வியட்நாம் இடையிலான நட்புறவு என்றென்றும் நிலைத்திருக்கட்டும் என்றார்.





