சிறைகளில் நெரிசல் குறித்து மாற்று வழிகளை ஆராயுங்கள் - திஸ்ஸ அத்தநாயக்க
சிறைச்சாலைகள் அனைத்தும் கொள்ளளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், கைதிகளை பராமரிப்பதற்காக அரசாங்கத்துக்கு ஏற்படும் செலவுகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன.
சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி நிலைமைக்கு, ஒவ்வொரு சந்தேக நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாரும் சட்ட மா அதிபர் பிரிவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுப்பதே பிரதான காரணமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைப்படுத்தாமல் வெளியில் வைத்து விசாரணை செய்யக்கூடிய வழக்குகளும் இருக்கின்றன. குற்றத்தின் தன்மையைக் கருத்தில்கொண்டு, சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்காமல் வெளியில் வைத்திருந்தே அவ்வாறான வழக்குகளை விசாரணை செய்ய முடியும். எனினும், துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் சந்தேக நபர் ஒருவருக்கு வழங்கப்படும் முதல் தண்டனையாக விளக்கமறியலில் அடைப்பதன் ஊடாக சிறைப்படுத்துவதே தற்போதைய நடைமுறையாகக் காணப்படுகிறது. ஆனால் பொலிஸார் தொடர்ச்சியாகச் செய்வது ஒவ்வொரு சந்தேக நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கோருவதாகும்.
இதன் காரணமாக சிறைச்சாலைகள் அனைத்தும் கொள்ளளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், கைதிகளை பராமரிப்பதற்காக அரசாங்கத்துக்கு ஏற்படும் செலவுகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன.
மறுபுறம், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் குற்றச்சாட்டுகளும் அது சார்ந்த சந்தேக நபர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளன. தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் இவ்வாறான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களேயாவர்.
எனவே, இப்பிரச்சினைக்கு முறையானதொரு தீர்வாக, அவசியமற்ற முறையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கும் நடைமுறையைத் தவிர்த்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நேரடியாக நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்வது அவசியமாகும். இது குறித்த பல முன்மொழிவுகள் தற்போது நீதி அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.





