பொலிஸ் துறையில் அரசியல் தலையீடுகளுக்கு இடமில்லை: ஜனாதிபதி அநுர
போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஆகவே போதைப்பொருள் ஒழிப்பின் வீரர்களாக பொலிஸார் மாற வேண்டும்.

நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளதால் தப்பித்து விட்டோம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். அவ்வாறு மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்படும்.குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகளின் பின்னணியில் அரசியல் தலையீடு மற்றும் அரசியல் சக்தி இருந்தது அனைவரும் அறிந்ததே.இந்நிலை எமது அரசாங்கத்தில் ஒருபோதும் ஏற்படாது. உங்களின் கடமைகளை தாய்நாட்டுக்காகவும்,பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படுத்துங்கள்.அதற்கு தைரியமாக செயற்படுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினார்.
போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய பொலிஸார் அதற்கு உடந்தையாக செயற்படுவார்களாயின் அதுவே பாரிய அழிவாக அமையும்.போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பழைய பழக்கத்தை கைவிட வேண்டும். பழக்கத்தை கைவிடாவிடின் பொலிஸ் சேவையை கைவிட தயாராக வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
159 ஆவது தேசிய பொலிஸ் தினத்தை முன்னிட்டு கொழும்பு பொலிஸ் மைதானத்தில் 03-09-2025 அன்று நடைபெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,
பொலிஸ் திணைக்களம் 159 ஆண்டுகாலத்தில் பாரிய சவால்களுக்கு மத்தியில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது. அளப்பரிய சேவையாற்றியுள்ளது.பொலிஸ் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புடனான சேவையினால் தான் பொலிஸ் சேவை 159 ஆண்டுகால கௌரவத்தை தனதாக்கியுள்ளது.
பொலிஸ் சேவைக்கு பாராட்டுக்கள் மற்றும் கௌரவம் காணப்படுவதை போன்று விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றன.ஆகவே பொலிஸ் சேவையின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொலிஸ் சேவையில் ஈடுபடும் சகலரினதும் பிரதான பொறுப்பாகும்.பொதுமக்களினதும், நாட்டினதும் பாதுகாப்புக்காக பொலிஸார் செயற்பட வேண்டும்.
பொலிஸ் சேவைக்கான கௌரவத்தை உறுதியாக பாதுகாக்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பொலிஸ் சேவை தொடர்பில் வெளியாகும் ஒருசில செய்திகள் ஆரோக்கியமானதல்ல,84 ஆயிரம் பேர் உள்ள பொலிஸ் சேவையில் ஒருசிலரது முறையற்ற செயற்பாடுகள் ஒட்டுமொத்த பொலிஸ் சேவைக்கும் இழுக்கை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பொலிஸ் சேவை திறமையானது.சர்ச்சைக்குரிய சம்பவங்களை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர்.மிகவும் திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் சேவையில் உள்ளார்கள்.திறமையுடன் மனிதாபிமானத்துடன் செயற்பட கூடியவர்களும் உள்ளார்கள்.
நாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய படுகொலைகள் மற்றும் குற்றங்கள் உள்ளன.இந்த படுகொலைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான உண்மை ஏன் வெளிவரவில்லை.பொலிஸ் திணைக்களத்தின் பலவீனமா? நான் ஒருபோதும் அவ்வாறு எண்ணமாட்டேன். குற்றங்களை குறுகிய நேரத்தில் கண்டுப்பிடிக்கும் சிறந்த விசாரணையாளர்கள் பொலிஸ் சேவையில் உள்ளார்கள்.
வெளிக்கொண்டு வர முடியாத படுகொலைகள் மற்றும் குற்றங்களின் பின்னணியில் அரசியல் சக்தி மற்றும் அரசியல் அதிகாரம் இருந்துள்ளது.இதுவே உண்மை.பொலிஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்தாலும் அரசியல் தலையீடுகளினால் அவை பலவீனடைந்த வரலாறும் உண்டு.விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் பழிவாங்கப்பட்ட கலாசாரமும் இந்த நாட்டில் இருந்தது. எமது அரசாங்கத்தில் அவ்வாறான நிலை ஏற்படாது என்று உறுதியளிக்கிறேன்.நீங்கள் உங்களின் கடமைகளை தாய்நாட்டுக்காகவும்,பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் செயற்படுத்துங்கள்.அதற்கு தைரியமாக செயற்படுங்கள்.
குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கப்படும் என்று ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள். படுகொலைகள் மற்றும் குற்றங்களை காலங்கள் தீர்மானிக்காது.குற்றங்கள் எதனையும் காலவோட்டத்தில் மறக்கடிக்க முடியாது.குற்றவாளிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தாத நிலையில் குற்றங்கள் தூய்மைப்படுத்தப்படமாட்டாது.ஆகவே குற்றங்களுக்குரிய தண்டனைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
ஒருசில குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் காலவோட்டத்தின் பின்னர் அவதானத்துக்குட்படுகிறது. தசாப்த காலங்களுக்கு முன்னரான குற்றங்களின் விசாரணைகள் மற்றும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன. காலவோட்டத்தின் பின்னர் தப்பித்துக் கொள்ளலாம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள்.இது ஒருபோதும் வெற்றிப்பெறாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம்.காலம் தண்டனையை தீர்மானிக்காது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
போதைப்பொருள் வியாபாரம் நகரம் முதல் கிராமம் வரை வியாபித்துள்ளது.பாரிய எதிர்பார்ப்புடன் பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். ஆனால் அந்த பிள்ளைகள் இன்று போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்கள்.ஒருசிலர் தமது சுயநலனுக்காக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். போதைப்பொருள் வியாபாரத்துக்கு அரசியல் தலையீடு இருந்ததை அனைவரும் அறிவோம்.அரச நிறுவனங்களின் பிரதானிகளும், பொலிஸ் சேவையில் ஒருசிலரும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புப்பட்டுள்ளார்கள் என்பதையும் இதன்போது குறிப்பிட்டுக்கொள்கிறேன்.
போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக செயற்பட வேண்டிய பொலிஸார் அதற்கு உடந்தையாக செயற்படுவார்களாயின் அதுவே பாரிய அழிவாக அமையும்.போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒருசில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பழைய பழக்கத்தை கைவிட வேண்டும். பழக்கத்தை கைவிடாவிடின் பொலிஸ் சேவையை கைவிட தயாராக வேண்டும்.
சகல துறைகளின் கௌரவத்தை அத்துறைகளின் உத்தியோகத்தர்கள் பாதுகாக்க வேண்டும்.போதைப்பொருள் வியாபாரத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஆகவே போதைப்பொருள் ஒழிப்பின் வீரர்களாக பொலிஸார் மாற வேண்டும்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் சமூக கட்டமைப்பில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றல் மற்றும் அவர்களை கைது செய்யும் பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு.நீங்கள் சாதாரண குடிமக்கள் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பை தோளில் பொறுப்பேற்றுள்ளீர்கள்.ஆகவே மக்களுக்காக தைரியமாக செயற்படுங்கள்.மக்கள் நம்பிக்கையுடனும், தைரியமாகவும் பொலிஸ் நிலையத்துக்கு வரும் வகையில் மக்களுக்காக செயற்படுங்கள் என்றார்.