முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை: அமைச்சர் ஆனந்த விஜேயபால
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் 13-08-2025 அன்று பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திகுழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது. தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் 13-08-2025 அன்று பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திகுழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இல்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவமுகாமில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஊடகவியலாளர் மற்றும் பொதுமக்கள்அனைவருக்கும் தெரியும். அவர்கள் அனுமதியின்றி உள்ளே நுழைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக 3 இராணுவ வீரர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அங்கு இரும்பு திருடப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பில் இராணுவத்தினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரும்பு கடத்தலில் 3 இராணுவத்தினர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் நிமித்தம் 3 இராணுவத்தினரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அதேவேளை நீதியாக விசாரணை இடம் பெற்றுவருகின்றது. இதனை மக்களுக்கு நாங்கள் சொல்லுகின்றோம். எனவே தவறு செய்தால் யாரென்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும்.
அதேவேளை இராணுவ முகாங்களையே பொலிஸ் நிலையங்களையே அவசியம் இல்லாமல் அகற்ற தேவையில்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் பாதுகாப்பான அல்லது முக்கியமான இடங்களை தவிர நில விடுவிப்பினை தொடக்கத்தில் இருந்து கூடுதல் நிலங்களை விடுவித்துள்ளோம் என்றார்.





