என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் ஐந்து முறை முயற்சித்து தோல்வியடைந்தது: உதய கம்மன்பில
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
 
        
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் ஐந்து முறை முயற்சித்து தோல்வியடைந்தது. இந்த முறையும் முயற்சிக்கிறது. இந்த முறை சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைமை காரியாலயத்தில் 29-10-2025அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச சார்பற்ற நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஊடாக எனக்கு எதிராக முறைப்பாடளித்து, சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார்கள்.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்ட முறைமை குறித்து நான் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய விடயங்களினால் பணிப்பாளர் நாயகத்தின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் 125 ஆவது பிரிவின் பிரகாரம் நான் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முறைப்பாடளித்தவரை காட்டிலும், முறைப்பாட்டை பதிவு செய்த உத்தியோகத்தருக்கே இந்த முறைப்பாடு குறித்து அதிக அக்கறை காணப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலகம், மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயம் உட்பட அரச நிறுவனங்களில் எமது ஆதரவாளர்கள் இருப்பதை போன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் எமது ஆட்கள் உள்ளார்கள். நடப்பவற்றை எமக்கு குறிப்பிடுவார்கள்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயக பதவிக்கு மாதவ தென்னக்கோனுக்கு முழுமையான தகுதி காணப்பட்ட நிலையில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலையீட்டினால் தான் தெரிவில் இரண்டாம் நிலையில் இருந்த ரங்க திஸாநாயக்க பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.இந்த நியமனம் முறைகேடானது என்பதை சாட்சியங்களுடன் வெளிப்படுத்தினேன்.
வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு நான் இவற்றை குறிப்பிடவில்லை. உயர்நீதிமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட சத்தியபிரமாண கூற்றை அடிப்படையாகக் கொண்டே இவற்றை குறிப்பிட்டேன்.மோசடியாள முறையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவாராயின், அதை விட பாரதூரமான மோசடி பிறிதொன்றும் கிடையாது. தவறை திருத்திக் கொள்வதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.மாறாக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக எம்மை பழிவாங்க முயற்சிக்கிறது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு வாரங்களேனும் சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. என்னை கைது செய்வதற்கு அரசாங்கம் ஐந்து முறை முயற்சித்து தோல்வியடைந்தது.இந்த முறையும் முயற்சிக்கிறது. இந்த முறை சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன்.
பொலிஸ் உயரதிகாரிகளிடமிருந்து புலனாய்வு தகவல்களை பெறும் யூடியுபர் ஒருவர் மாதம் இலட்சக்கணக்கில் உழைக்கிறார்.எனக்கு சேறு பூசும் பொறுப்பை அரசாங்கம் இந்த நபரிடம் ஒப்படைத்துள்ளது. உழைக்கும் பணத்தை இவர் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் . இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் என்றார்.





 
  
