சுதந்திர ஊடக இயக்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு
இச்சட்டமூலத்தின் சில வரையறைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் சாதாரண பிரஜைகள் மற்றும் ஒன்லைன் கிரியேட்டர் உரிமைகளும் முடக்கப்படலாம் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை ஊடக உயர்தொழிளர்களின் பட்டயம் பெற்ற நிறுவக சட்டமூலத்துக்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
சுதந்திர ஊடக இயக்கத்தின் உறுப்பினர்களான உதய களுபத்திரண மற்றும் சுனில் ஜெயசேகர ஆகியோர் சட்டத்தரணி லக்ஷான் டயஸ் ஊடாக இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் சட்டமா அதிபர், ஊடகத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இம்மனுவை நேற்று (7) பரிசீலித்த உயர் நீதிமன்றம், எதிர்வரும் 11ஆம் திகதிக்குள் இது தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, முன்மொழியப்பட்டுள்ள கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமையான பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பன கட்டுப்படுத்தப்படும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், இச்சட்டமூலத்தின் சில வரையறைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் சாதாரண பிரஜைகள் மற்றும் ஒன்லைன் கிரியேட்டர் உரிமைகளும் முடக்கப்படலாம் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அரச வேலைத்திட்டத்தின் விருப்பத்திற்கமையவே இதன் இடைக்காலக் குழு நியமிக்கப்படுவதால், கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஒரு கட்டமைப்பே உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, திருத்தங்களின்றி இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.





