ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில் உரிய பதிலளிப்போம்: அமைச்சர் விஜித்த தெரிவிப்பு
வெளிவிவகார அமைச்சு ஊடாக விசேட அறிக்கையாளருக்கு விரிவான விளக்கத்தை அரசாங்கம் விரைவில் அனுப்பவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்ட வரைபு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் மார்கரெட் சாத்தர்வெய்ட் எழுப்பியுள்ள கவலைகளுக்கு இலங்கை அரசாங்கம் உரிய பதிலை வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த யோசனை குறித்து மார்கரெட் சாத்தர்வெய்ட் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிய உத்தியோகபூர்வ கடிதத்தில் கவலை வெளியிட்டிருந்தார்.
இந்த திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரம், நியாயமான விசாரணைக்கான உரிமை, அதிகாரப் பிரிவினை, நீதிபதிகள் எவ்வித தலையீடுகளுமின்றி தமது கடமைகளைச் செய்யும் திறன் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை ஆகிய சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு அமைவாக இல்லாமலிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியிருந்ததுடன், இது குறித்த மேலதிக தகவல்களையும் கோரியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், வெளிவிவகார அமைச்சு ஊடாக விசேட அறிக்கையாளருக்கு விரிவான விளக்கத்தை அரசாங்கம் விரைவில் அனுப்பவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சேவைத் தேவைகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்கு தீர்வுகளை விரைவுபடுத்துவதற்காகவே இந்த திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இதுவொகட்டமைப்பு மாற்றமே தவிர, குறிப்பிட்ட நபர்களை இலக்காகக் கொண்டது அல்ல என்பதை அவருக்கு விளக்குவோம் என்றார்.
அரசாங்கத்தின் பதிலில், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக கட்டமைப்பிற்கு உட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெளிவாக குறிப்பிடப்படும் என்றும், எவர் மீதும் இதனை திணிக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





