திருமலை முத்து நகரில் 800 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டுள்ளது: எதிர்க்கட்சித் தலைவர்
விவசாயிகள் முன்வைத்த விடயங்களின் பிரகாரம், 1972 முதல் இந்த காணிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2023 முதலே இந்த விவசாய காணிகளுக்கு பாதகம் விளைவிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை முத்து நகர் விவசாய நிலத்தில் 53 வருடங்களாக பயிர்செய்கை மேற்கொண்ட, 1000 குடும்பங்களின், 800 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு அரச அனுசரனையுடன் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டு மென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் 23-07-2025 அன்று இடம்பெற்ற கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,.
திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தகரவேட்டவொன், மத்தியவெளி, முத்து நகர் ஆகிய மூன்று கிராமங்களையும் சேர்ந்த 1000 குடும்பங்கள், 53 வருடங்களாக, 1972 ஆம் ஆண்டு முதல் 800 ஏக்கர் காணியில் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
2023 ஆண்டு முதல் பயிர்செய்கையில் ஈடுபட்டு வருவோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய 2025 பெப்ரவரி மாதத்திலிருந்து 53 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள் பலவந்தமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது விவசாய நிலங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் கோரியிருந்த போதிலும், அதனை வழங்காது விவசாயிகளை வெளியேற்றி, இந்த பயிர் செய்கை நிலத்தில் 200 ஏக்கர் காணியை பெற்றுக் கொடுத்து, அதில் சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 53 வருடங்களாக பயிர் செய்து வந்த விவசாயிகள் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இந்த காணிக்கான உரிமை விவசாயிகளுக்கே காணப்படுகின்றது. சூரிய மின் சக்தியை ஊக்கவிக்க வேண்டும் தான், ஆனால் சூரிய மின்கல சேமிப்புகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையை அரசாங்கம் குறைத்துள்ள சந்தர்ப்பத்தில், இந்த சூரிய மின் சக்தி திட்டத்திற்கு இடத்தை ஒதுக்கி, விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மோசமான விடயம்.
இந்த விவசாயிகள் பல்வேறு அரசாங்கங்களில் இருந்து உர மானியங்கள், விவசாய கடன்கள் போன்றவற்றையும் பெற்றுள்ளனர். கடந்த தேர்தல் காலத்தில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவசாய நிலங்களைப் பாதுகாப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். தகரவேட்டவொன் குளம், கடலாஞ்சி குளம், சின்ன நானா குளம், முத்து நகர் குளம் என 4 குளங்கள் இப்பிரதேசங்களில் அமைந்து காணப்படுகின்றன.
இந்த குளங்களை புனரமைப்பதற்கு கூட அரச நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 53 வருடங்களாக பயிர்செய்கை மேற்கொண்ட, 1000 குடும்பங்களின், 800 ஏக்கர் காணியை ஒரு கையெழுத்தால் அபகரித்து, தற்போது வரையில் இரு சூரிய மின் சக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த கம்பெனிக்காரர்கள் விவசாயிகளை பொலிஸிக்கு அழைத்துச் சென்று பயமுறுத்தியுள்ளனர்.
அடுத்த போக விவசாய நடவடிக்கைகளை இந்த விவசாயிகளால் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால், இவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள காணிகளுக்கான உரிமம் இவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நீர்ப்பாசன வடிகாளமைப்பு வசதிகளுடன் கூடிய மாற்று இடமொன்றை பெற்று கொடுக்க வேண்டும். இந்த விளைநிலங்களை அபகரிக்கக் கூடாது. நிறுவனங்கள் தங்கள் நிதி பலத்தையும், ஏனைய பலங்களையும் பயன்படுத்தி இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
விவசாயிகள் முன்வைத்த விடயங்களின் பிரகாரம், 1972 முதல் இந்த காணிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2023 முதலே இந்த விவசாய காணிகளுக்கு பாதகம் விளைவிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் இந்தப் பிரச்சினையை முன்வைக்கும்போது, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இந்தப் பிரச்சினையை முன்வைப்பதைத் தடுத்து அவருக்கு தடைகளை ஏற்படுத்தி வந்தனர்.