பயிற்சிக்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படை போர்க்கப்பல்
இது இரு நாடுகளின் சுழியோடி துறைகளுக்கு இடையே அனுபவப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கடற்படையின் 'ஐ.என்.எஸ். நிரீக்ஷாக்' போர்க்கப்பல், பயிற்சி திட்டத்தை நடத்துவதற்காக 21-04-2026 அன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் சைலேஷ்குமார் ட்யாகி கடமையாற்றுகின்றார். போர்க்கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சி திட்டத்தை நடத்துவார்கள். இது இரு நாடுகளின் சுழியோடி துறைகளுக்கு இடையே அனுபவப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள். அத்துடன், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களுக்கும் அவர்கள் பயணம் மேற்கொள்ளவும் உள்ளனர்.





