ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்சர்வதேச பிரகடனத்தை மீறும் செயல் - எதிர்க்கட்சித்தலைவர்
உண்மையில் யுத்த நிலைமையில் ஏற்பட்டிருக்கும் சிக்கலான நிலையில் நாங்கள் நாடு என்றவகையில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்,
இறையாண்மையுள்ள ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்காவின் இந்த தாக்குதல் சர்வதேச பிரகடனத்தை மீறும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 03-03-2026 அன்று இடம்பெற்ற அந்நியச் செயலாவணி சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இறையாணடமையுள் ஈரான் நாட்டின் மீது அமெரிக்க மேற்கொண்ட தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்பதுடன் ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தையும் மீறும் செயலாகும். அதனால் இந்த தாக்குதல் தொடர்பில் ஒட்டுமொத்த பாராளுமன்றமும் கண்டிக்க வேண்டும் என பிரேரிக்கிறேன்.
அதேநேரம் அரசாங்கமும் இந்த தாக்குதலை கண்டித்து அறிவிப்போன்றை வெளியிடுமாக இருந்தால் அது நல்லதாகும்.நாங்கள் பயப்பட தேவையில்லை. அதேநேரம் ஈரானும் பதிலடியாக மத்திய கிழக்கில் கட்டார், குவைட், ஐக்கிய அரபு ராஜ்ஜியம். பஹ்ரைன், சவூதி போன்ற சுற்றியுள்ள நாடுகள் மீது மேற்கொண்ட தாக்குதலையும் நாங்கள் கண்டிக்கிறோம்.
உண்மையில் யுத்த நிலைமையில் ஏற்பட்டிருக்கும் சிக்கலான நிலையில் நாங்கள் நாடு என்றவகையில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும், அதனால் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் பிரித்துப்பார்க்காமல் இந்த நிலைப்பாட்டை எமது நாட்டின் நிலைப்பாடாக வெளிப்படுத்துவது முக்கியமான விடயமாகும்.
அதனால் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான இந்த தாக்குதல் தவறு என தெரிவிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றார்.





