ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் உயர்மட்ட குழுவினருடனான பிரதமர் ஹரிணி சந்திப்பு
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு விசேட முக்கியத்துவமளித்து, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தலின் ஊடாகப் பெற்ற மக்கள் ஆணையைத் தொடர்ந்து, நம்பிக்கை மற்றும் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்துக்கு சமாந்தரமாக, பிரதமர் ஹரினி அமரசூரிய ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் உலகளாவிய தனியார் துறைப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உயர்மட்ட குழுவினருடனான சந்திப்பிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தயார்நிலை மற்றும் நெருக்கடி முகாமைத்துவத்துக்கான ஐரோப்பிய ஆணையாளர் ஹட்ஜா லாபிப்பை சந்தித்த பிரதமர், தித்வா புயலைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் வழங்கிய ஆதரவுக்காக தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், உலக வங்கியின் 'கிரேட்' அறிக்கையின் முக்கிய முடிவுகள் குறித்து ஆணையாளருக்கு விளக்கமளித்த பிரதமர், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மீட்சி முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவைக் கோரினார்.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ள அலெக்சாண்டர் டி குரூவைச் சந்தித்த பிரதமர், இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்களிப்பைப் பாராட்டியதோடு, வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐக்கிய நாடுகள் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தலின் ஊடாகப் பெற்ற மக்கள் ஆணையைத் தொடர்ந்து, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன், சமூகப் பாதுகாப்பு முறைமைகளைப் பலப்படுத்துவதற்கும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்குமான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு விசேட முக்கியத்துவமளித்து, இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது. சிங்கப்பூரின் தொழிற்முறை கல்வியை மேம்படுத்துவதில் அந்நாட்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆற்றிய முக்கிய பங்கைக் கருத்திற்கொண்டு, அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதில் இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தைப் பிரதமர் இதன்போது வெளிப்படுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையே இந்த அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பொருட்டு, சாத்தியமான கண்காணிப்புக் கள விஜயம் ஒன்றின் அவசியம் குறித்தும் இக்கலந்துரையாடலின்போது முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





