ஜனாதிபதி, நீதி அமைச்சின் செயலாளர்களை விசாரியுங்கள்; பொதுஜனபெரமுன
ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை தலைமையகத்தின் மீது மாத்திரமே குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரம் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நீதியமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரை விசாரணைக்குட்படுத்த வேண்டும்.அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தால் முழு அரச நிர்வாக கட்டமைப்பும் பலவீனமடையும் நிலை காணப்படுகிறதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச சேவையின் உயர் அதிகாரிகளை கைது செய்து அவர்களை விசாரணைக்குட்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதனால் அரச சேவையாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள்.88 மற்றும் 89 ஆண்டு காலப்பகுதிகளில் துண்டுபிரசுரம் ஊடா அரச சேவையாளர்களை அச்சுறுத்திய சூழல் காணப்பட்டது.அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை எதிர்க்கும் அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் நிலை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தால் முழு அரச கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் அடிப்படையில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு பொறுப்பேற்கும் நிலையில் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கத்தின் உயர் பிரமுகர்களோ இல்லை.
ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை தலைமையகத்தின் மீது மாத்திரமே குற்றஞ்சாட்டப்படுகிறது.நீதியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரம் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நீதியமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரை விசாரணைக்குட்படுத்த வேண்டும்.அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தால் முழு அரச நிர்வாக கட்டமைப்பும் பலவீனமடையும் நிலை காணப்படுகிறது என்றார்.





