ஐ. நா வரையில் சென்றும் விடிவுக் கிடைக்காத இனமாக இருக்கிறோம் - செல்வம் அடைக்கலநாதன்
அங்கு இலையான்கள் சிறுவர்களிடையே தொற்று நோய்களை உட்படுத்துகின்றது. இதனால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மே 18 விண்ணை எட்டும் அளவுக்கு எமது மக்களின் அழுகுரல் இருந்தது. ஐ. நா வரையில் சென்றும் விடிவுக் கிடைக்காத இனமாக இருக்கிறோம். இறைவனுக்கும் அது தெரியவில்லை. இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயமான தீர்வையே கோருகிறோம் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-05-2026 அன்று நடைபெற்ற அமர்வின்போது நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, முள்ளிவாய்க்கால் தொடர்பில் பலரும் பலவிதமாக கூறுகின்றனர். இங்கு நடந்தது உலக நாட்டில் எந்த மக்களுக்கும் வரக்கூடாத அவலமே அது. முள்ளிவாய்க்காலில் நாங்கள் பட்ட அவஸ்தைகளையே மே 18 பறைசாற்றுகிறது.
ஒரு குழந்தை இறந்த தாயின் மார்பில் பால் குடிப்பது முள்ளிவாய்க்கால் அவலத்தில் ஒரு அங்கமாகும். தகப்பன் குண்டு அடிப்பட்டிருக்கும் போது தாயும் பிள்ளையும் அவரை தூக்க முடியாது தாண்டி வருவது எந்தளவு அவலமாகும். முள்ளிவாய்க்கால் அவலத்தில் தம் கண் முன்னே இறந்தவர்களுக்கு இறுதிக்கிரியைக்கூட செய்ய முடியாமல் போனமை தொடர்பில் இன்னும் அவர்களின் உறவுகள் மனவேதனையில் வாழ்கிறார்கள்.
மே 18 விண்ணை எட்டும் அளவுக்கு எமது மக்களின் அழுகுரல் இருந்தது. ஐ. நா வரையில் சென்றும் விடிவுக் கிடைக்காத இனமாக இருக்கிறோம். இறைவனுக்கும் அது தெரியவில்லை. இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயமான தீர்வையே கோருகிறோம்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ். பல்லைக்கழக வளாகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்ட போதும், இன்னும் வரையில் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏன் இந்த விடயத்தில் கவனம் இன்றி இருக்கின்றனர் என்று தெரியவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அத்துடன் கொன்னையன் குடியிருப்பு கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு தோட்டம் செய்பவர்கள் கோழி எச்சங்களை வெறுமனே தூவி விவசாயம் செய்கின்றனர். அங்கு இலையான்கள் சிறுவர்களிடையே தொற்று நோய்களை உட்படுத்துகின்றது. இதனால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கும் மாவட்டமாக காணப்படுகிறது. கணிதம், விஞ்ஞானத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இருந்தாலும் பாடசாலை அதிபர்கள் தமது திறமையால் வன்னி மாவட்டத்தை ஒரு நிலையில் வைத்திருக்கின்றனர். ஆனால் வன்னியில் கல்வி புறக்கணிக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்பதனை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.





