தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தாயான உசாகரன் மாலினி (வயது38) மற்றும் பிள்ளைகளான உசாகரன் மிக்சா ( வயது11), உசாகரன் சதுசா (வயது 4) ஆகியோராவர்.

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளோடு வசித்துவந்த குறித்த தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும், அவர் வசித்து வந்த வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பாலுள்ள அரச வீட்டு திட்டத்திலுள்ள வீட்டு கிணற்றிலிருந்து சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.
குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து கிராம மக்கள் விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்குவருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிசார் கிணற்றில் சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தாயான உசாகரன் மாலினி (வயது38) மற்றும் பிள்ளைகளான உசாகரன் மிக்சா ( வயது11), உசாகரன் சதுசா (வயது 4) ஆகியோராவர்.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதும் நடைபெற்றதா என்பது குறித்து மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.