நாணய நிதியத்தின் திட்டங்களை அமல்படுத்தாவிடின் ஆபத்து: பந்துல
அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு 300 முதல் 400 பில்லியன் ரூபா வரை பற்றாக்குறை நிலவுகிறது.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஏற்படும் அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குப் போதுமான நிதி வசதி இலங்கையிடம் இல்லை. நாணய நிதியத்தின் செயற்திட்டங்களை அரசாங்கம் முறையாக அமல்படுத்த வேண்டும். இல்லையேல் பொருளாதார நெருக்கடியிலிருந்து நிலையான மீட்சியைப் பெற முடியாது என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஹோமாகம பகுதியில் 24-01-2026 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ரூபாவோ அல்லது வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்குத் தேவையான டொலர்களோ நாட்டில் இல்லை.
அத்துடன், அரசாங்கத்தின் இந்த வருட வருமானம் 5.3 ரில்லியன் ரூபாவாகும். அரசாங்கத்தின் மீளெழும் செலவினம் 5.6 ரில்லியன் ரூபாவாக காணப்படுகிறது.
அதற்கமைய, அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு 300 முதல் 400 பில்லியன் ரூபா வரை பற்றாக்குறை நிலவுகிறது.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவுகள், சூறாவளி போன்ற உள்ளகத் தாக்கங்கள் ஏற்பட்டாலும் அல்லது வெளிநாடுகளில் ஏற்படும் யுத்தம் போன்ற வெளிப்புறத் தாக்கங்கள் ஏற்பட்டாலும், அத்தகைய அதிர்வுகளை எதிர்கொள்வதற்குத் தேவையான வலுவான பொருளாதார நிதி நிலைமை எமது நாட்டில் இல்லை.
அதற்கமைய, நாட்டில் நிலவும் அடிப்படைப் பிரச்சினை ரூபா மற்றும் டொலர் பற்றாக்குறையாகும். சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டங்களை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும். இல்லையேல் பொருளாதார நெருக்கடியில் இருந்து நிலையான மீட்சியை அடைய முடியாது என்றார்.





