‘பிரேக் செயலிழந்துள்ளது' சாரதி கூறினார் : பயணியொருவர் அதிர்ச்சி தகவல்
காயமடைந்த அந்த நபர், தான் சாரதி மற்றும் நடத்துனருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது சாரதி ஒரு வளைவில் திரும்பும்போது பிரேக் செயலிழந்ததாகத் தெரிவித்ததாகவும் கூறினார்.
எல்ல – வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிர் பிழைத்த நபரொருவர் , விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பேரூந்து சாரதி 'பஸ்ஸில் பிரேக் செயலிழந்துள்ளது' என்று கூறியதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
காயமடைந்த அந்த நபர், தான் சாரதி மற்றும் நடத்துனருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது சாரதி ஒரு வளைவில் திரும்பும்போது பிரேக் செயலிழந்ததாகத் தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால், சாரதியின் இந்தக் கருத்தை நடத்துனரும், அருகில் இருந்த மற்ற பயணிகளும் சிரித்துக்கொண்டு கேலி செய்ததாகவும், அதனை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
'இரண்டாவது வளைவில் திரும்பும்போதுதான் பிரேக் பிடிக்கவில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதன் பின்னர் பேருந்து எதிர்திசையில் வந்த வாகனத்துடன் மோதி, 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. நான் சுமார் ஒரு மணி நேரம் சுயநினைவின்றி இருந்தேன். ஒரு சிறு பிள்ளை அழுவதை கேட்டு கண் விழித்தேன். என்னால் நகர முடியவில்லை. பின்னர் மீட்பு படையினர் வந்து எங்களை மீட்டனர்,' என்று அவர் தெரிவித்தார்.
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த நபர் இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில், ' நாம் தங்காலையிலிருந்து வந்தோம். அதிகாலை 3 மணிக்கு நுவரெலியாவுக்கு சுற்றுலா செல்லவிருந்தோம். எனது அம்மா தொழில் புரியும் அலுவலகத்தின் ஊடாக இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை பயணத்தை தொடங்கி மாலை வேளையில் எல்ல பகுதியை அண்மித்தோம். அப்பகுதியில் ஒரு பாதை வளைவில் சென்று கொண்டிருந்த போது, 'பிரேக் இல்லை' என சாரதி கூறினார்.
அப்போது நான் சாரதி மற்றும் நடத்துனரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மூவரும் பேசிக் கொண்டிருந்த போதே சாரதி அவ்வாறு கூறினார். அவர் கூறியதைக் கேட்டு நடத்துனரும் ஏனையோரும் சிரித்தனர். பொய் கூறாதீர்கள் எனக் கூறியே அவர்கள் சிரித்தனர். அந்த வளைவைத் தாண்டி இரண்டாவது வளைவை அண்மித்த போதே 'உண்மையிலேயே பிரேக் இல்லை' என்று சாரதி கூறினார்.
அதன் பின்னரே சாரதி கூறியது உண்மை என தெரிந்தது. இதன் போது பேரூந்துக்கு முன்னாள் வந்த வாகனமொன்றின் மீது மோதிய பின்னரே விபத்து இடம்பெற்றது. அந்த வாகனம் என்பது எனக்கு நினைவில் இல்லை. பேரூந்து பள்ளத்தில் விழுந்த போது அதுவே எனது இறுதி நொடி என்று தோன்றியது. அதன் பினனர் நான் சுய நினைவை இழந்தேன்.
பின்னர் மயக்கம் தெளிந்த பின்னரே உயிருடன் இருப்பதை உணர்ந்தேன். விழுந்து சுமார் ஒரு மணித்தியாலம் நான் சுய நினைவில் இல்லை. அதன் பின்னர் சிறு பிள்ளையொன்றின் சத்தம் கேட்ட போதே எழுந்தேன். எனினும் அந்த பிள்ளை கைகளில் தூக்கிக் கொண்டு என்னால் எழும்ப முடியவில்லை. அதனால் இங்குகொரு சிறு பிள்ளை இருப்பதாக கூச்சலிட்டேன். அதன் பின்னரே அந்த பிள்ளையுடன் நானும் மீட்கப்பட்டேன்.
ஏதோ ஒரு ஜன்னல் ஊடாக நான் வெளியில் வீசப்பட்டேன். ஆனால் அது முன்னாலிருந்த ஜன்னலா அல்லது பின்னாலிருந்த ஜன்னலா என்பது நினைவில்லை. ஜன்னல் வழியாக வீசப்பட்டு மரமொன்றில் சிக்கி கீழே விழுந்தேன். பேரூந்து பிரண்டு பிரண்டு துண்டு துண்டாக கீழே விழுந்தது.' என்றார்.
இதேவேளை பேரூந்து நடத்துனர் இது தொடர்பில் தெரிவிக்கையில், 'சாதாரண வேகத்திலேயே வந்து கொண்டிருந்தோம். வாகனமொன்றின் மீது மோதிய பின்னரே பஸ் கவிழ்ந்தது. பிரேக் இல்லை என சாரதி கூறினார். அதிக வேகத்தில் வரவில்லை. விபத்து இடம்பெற்ற பின்னர் எனக்கு சுய நினைவில்லை. வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட பின்னரே நினைவு திரும்பியது.' என்றார்.





