நிர்கதியாகியுள்ள மக்கள் இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றம்: லக்ஷ்மன் கிரியெல்ல
குறைந்தபட்சம் தற்காலிகமாக தங்குவதற்கு இந்த மக்களுக்கு கூடாரங்களையாவது வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இயற்கை அனர்த்தங்களால் கண்டி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் தற்போதும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக இருப்பிடங்கள் கூட அமைத்துக் கொடுக்கப்படாத நிலையில், அவர்கள் குறித்த இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 26-12-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் மலையகத்துக்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ள போதிலும், வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணங்கள் மிகவும் மந்தகதியிலேயே கிடைக்கின்றன.
கண்டி மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 55,804 குடும்பங்கள் உள்ள போதிலும், வாக்குறுதியளிக்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவு 32,170 குடும்பங்களுக்கு மாத்திரமே கிடைத்துள்ளது. இன்னும் 23,000 குடும்பங்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கவில்லை.
சமையலறை உபகரணங்களைப் பெறுவதற்காக வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 50,000 ரூபா மற்றும் பாடசாலை மாணவர்களின் உபகரணங்களுக்காக வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 25,000 ரூபா இதுவரை கண்டி மாவட்டத்தின் எந்தவொரு குடும்பத்துக்கும் கிடைக்கவில்லை. அது மாத்திரமின்றி உயிரிழப்பொன்றுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட இழப்பீட்டு தொகைகளும் மிகக் குறைவாகவே வழங்கபட்டுள்ளன. பெரும்பாலானோருக்கு அந்த தொகையும் கிடைக்கவில்லை.
கண்டி மாவட்டத்தில் தற்போது 95 நிவாரண முகாம்களில் 2,084 குடும்பங்களைச் சேர்ந்த 6,636 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மத வழிபாட்டுத் தலங்களில் தங்கியுள்ளனர். அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்களின் வீடுகள் அழிந்துள்ளதால் செல்வதற்கு இடமின்றி மக்கள் நிர்க்கதியாக உள்ளனர்.
குறைந்தபட்சம் தற்காலிகமாக தங்குவதற்கு இந்த மக்களுக்கு கூடாரங்களையாவது வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முழு கண்டி மாவட்டத்தையும் சிவப்பு வலயமாக பெயரிட்டுள்ள போதிலும், மண்சரிவு அபாயம் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் அடையாளம் காணப்படவில்லை.
அந்த நிறுவனத்தில் பணியாளர் பற்றாக்குறை இருப்பது அறிய கிடைத்துள்ளது. அது தொடர்பில் உதவ முயற்சித்த போதிலும், அதிகாரிகள் எனக்கு பதிலளிக்கவில்லை. மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு தெளிவான அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே கண்டி மாவட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ள இந்த இக்கட்டான நிலைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.





