அரசியல் படுகொலைகள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா ? சஜித் கேள்வி
1,000 பேருக்கு 2.2 பொலிஸ் அதிகாரிகள் என்ற விகிதம் இருக்க வேண்டும் என்று ஒரு சர்வதேச தரநிலை காணப்படுகின்றது
நாட்டில் தீவிரமடைந்துள்ள கொலை கலாசாரத்தை தடுப்பதற்கான புதியதொரு திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும். அத்துடன் நாட்டின் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மீதான அரசியல் படுகொலைகள் தொடர்பாக விசேட குழுக்கள் அல்லது சுயாதீன விசாரணை நடவடிக்கைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் 19-02-2026 அன்று நிலையியற் கட்டளை 27 இன் 2கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், துப்பாக்கிச் சூடு, மனிதப் கொலைகள் மற்றும் பிரபல நபர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அரச பாதுகாப்பு பொறிமுறையின் செயலாற்றுகை தொடர்பாக பொது மக்கள் நம்பிக்கையும் சீர்குலைந்துள்ளது. அந்த பின்னணியில் வலுவான பொலிஸ் சேவையின் தேவை முக்கியத்துவம் பெறுவதால், பின்வரும் கேள்விகளை நான் முன்வைக்கிறேன்.
இலங்கை பொலிஸ் துறையில் ஒவ்வொரு பதவியிலும் தற்போது நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? குறித்த வெற்றிடங்கள் எவ்வளவு காலமாக நிலவுகின்றன?
கடந்த தசாப்தத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுகள், மனித படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் எண்ணிக்கையை ஆண்டு அடிப்படையில் தெரிவிக்க முடியுமா? குறித்த சம்பவங்களுக்கிடையே சந்தேகநபர்களை கைது செய்தல், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் இற்றைவரை விசாரணைகள் நிறைவடையாத சம்பவங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக தெரிவிக்க முடியுமா?
நாட்டில் நிலவும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் துறையுடன் இணைந்து பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானது என்று அரசாங்கம் கருதுகிறதா? இந்நாட்டில் செயல்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச குற்றவியல் வலையமைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகள் யாவை?
1,000 பேருக்கு 2.2 பொலிஸ் அதிகாரிகள் என்ற விகிதம் இருக்க வேண்டும் என்று ஒரு சர்வதேச தரநிலை காணப்படுகின்றது . ஆகையால், இந்த தரநிலைகளை அமல்படுத்துவது போலவே, பாதுகாப்புப் படையினருக்கு பிரவேசிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் ஒரு வாக்குறுதியாக காணப்பட்ட, நீண்ட காலமாக விசாரணை முடிவடையாமல் உள்ள பிரபலமான சம்பவங்கள் குறித்து, நாட்டின் அரசியல்வாதிகள், அதாவது, ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மீதான அரசியல் படுகொலைகள் தொடர்பாக விசேட குழுக்கள் அல்லது சுயாதீன விசாரணை நடவடிக்கைகள் இதுவரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா ?ஆமெனில் அது எந்த நபர்கள் தொடர்பானவை? அவற்றின் முன்னேற்றம் எத்தகையது?
இதேநேரம் நாட்டில் தீவிரமடைந்துள்ள இந்தக் கொலை அலையைத் தடுப்பதற்கான புதியதொரு திட்டத்தை அரசு முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





