அர்ச்சுனாவுக்கு எதிராக கஜேந்திரகுமார் முறைப்பாடு
பாராளுமன்ற நூலகத்தில் வைத்து கௌசல்யா நரேந்திரன் என்பவர் தொடர்பில் நான் தவறாக குறிப்பிட்டதாக தெரிவித்திருந்தார்.
எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் . அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தார்.
பாராளுமன்றத்தில் 21-05-2026 அன்றுநடைபெற்ற அமர்வின்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கடந்த செவ்வாய்க்கிழமை (19) இந்த சபையில் உரையாற்றும் போது எனது பெயரைக் குறிப்பிட்டு போலியான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். பாராளுமன்ற நூலகத்தில் வைத்து கௌசல்யா நரேந்திரன் என்பவர் தொடர்பில் நான் தவறாக குறிப்பிட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறுவது முற்றிலும் பொய் நான் ஒருபோதும் அவ்வாறு பேசவில்லை என்பதுடன் சம்பந்தப்பட்ட நபரை நான் சந்திக்கவும் இல்லை.
ஆனால் அந்த பெண் தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் வைத்து தவறாக கதைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பொய்யான விடயத்தை கூறுவதன் மூலம் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடானது எனது சிறப்புரிமையை மீறுவதாக அமையும். அதன்படி அந்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் என்பதுடன், என்னைப்பற்றி பொய்யான விடயத்தை கூறியமைக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து இந்த விடயத்தை சிறப்புரிமை குழுவுக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்தார்.





