டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம்
இந்தியாவின் வலியுறுத்தலுக்கு அப்பால் மாகாணசபைத்தேர்தலை விரைந்து நடத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
இந்திய விஜயத்தின்போது 13 ஆவது திருத்தம் குறித்தோ, அதிகாரப்பகிர்வு குறித்தோ பேசப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று எமக்குத் தெரியாது. ஆனால் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு அப்பால் மாகாணசபைத்தேர்தலை விரைந்து நடத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி கருத்துரைத்த சுரேஷ் பிரேமசந்திரன், வழமையாக இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போது அழுத்தமாகவும், அன்றேல் மேலோட்டமாகவேனும் இவ்விடயங்கள் குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கும் நிலையில், இம்முறை இதுபற்றிப் பேசப்படவில்லை என அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறுவது எந்தளவுக்கு உண்மையாக இருக்கக்கூடும்? என சந்தேகம் வெளியிட்டார்.
அதேவேளை டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் இந்தியாவே பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இவ்விடயத்தில் இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்தாலும், பிரயோகிக்காவிட்டாலும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும், அதனை விரைந்து நிறைவேற்றவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.





