தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் சம்பளம் ஜே.வி.பி.யின் நிதியத்துக்கே செல்கிறது: பிரதமர் ஹரிணி தெரிவிப்பு
தொலைப்பேசி கொடுப்பனவு 50,000 ரூபா, போக்குவரத்து கொடுப்பனவு 15,000 ரூபா, அலுவலக கொடுப்பனவு 100,000 ரூபா, கூட்டத்துக்கான கொடுப்பனவு (நாள் ஒன்றுக்கு) 2,500 ரூபா,
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதச்சம்பளம் மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு செல்கிறது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல, முழு நாடும் இதனை அறியும். சம்பவ விவகாரத்தில் நாங்கள் வெளிப்படைத்தன்மையாகவே செயற்படுகிறோம். ஆளும் தரப்பின் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை என்னால் குறிப்பிட முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அதில் எம்மால் அரசியல் தீர்மானங்கள் மற்றும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது.ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் நிதியம் பற்றி வெளிப்படையாக குறிப்பிட முடியுமா, அவ்வாறு குறிப்பிட்டால் அது ஏனையவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய எதிர்கட்சியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறியிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 19-02-2026 அன்று நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றளவில் 54,285 ரூபா மாத சம்பளம், 1000 ரூபா உபசரிப்பு கொடுப்பனவு, சாரதி கொடுப்பனவு 3,500 ரூபா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சாரதியை பெற்றுக்கொண்டால் பாராளுமன்றத்தின் ஊடாக 3,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது. தொலைப்பேசி கொடுப்பனவு 50,000 ரூபா, போக்குவரத்து கொடுப்பனவு 15,000 ரூபா, அலுவலக கொடுப்பனவு 100,000 ரூபா, கூட்டத்துக்கான கொடுப்பனவு (நாள் ஒன்றுக்கு) 2,500 ரூபா,
பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ளுவதற்கு 2,500 ரூபா (நாளொன்றுக்கு) பாராளுமன்ற குழுக்களில் கலந்துக் கொண்டால் 2,500 ரூபா (நாளொன்றுக்கு), பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வு இல்லாத நாட்களில் குழுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டால் 2,500 ரூபா (நாளொன்றுக்கு) என்ற அடிப்படையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு இடைப்பட்ட தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. தேசிய பட்டியல் உறுப்பினருக்கு மாதாந்தம் 419.76 லீற்றர் எரிபொருளுக்கான சந்தைப்பெறுமதிக்குரிய கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிகல தமக்கு பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளம் வேண்டாம் என்று 2025.08.20 ஆம் திகதியன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளார்.அதற்கமைய அவருக்கு அந்த கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.
பிரதமர்,சபாநாயகர், பிரதி சபாநாயகர்,குழுக்களின் தலைவர், பிரதி குழுக்களின் தலைவர், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஆகியோர் எரிபொருள் கொடுப்பனவை பெறுவதில்லை.
159 உறுப்பினர்களின் மாதச்சம்பளம் மக்கள் விடுதலை முன்னணியின் நிதியத்துக்கு செல்கிறது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல, முழு நாடும் இதனை அறியும். சம்பவ விவகாரத்தில் நாங்கள் வெளிப்படைத் தன்மையாகவே செயற்படுகிறோம். ஆளும் தரப்பின் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை என்னால் குறிப்பிட முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அதில் எம்மால் அரசியல் தீர்மானங்கள் மற்றும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது.
ஐக்கிய மக்கள் சக்தி,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் நிதியம் பற்றி வெளிப்படையாக குறிப்பிட முடியுமா? அவ்வாறு குறிப்பிட்டால் அது ஏனையவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்றார்.





