117சதவீத இலக்கினை பூர்த்திசெய்த இலங்கை சுங்கம்
கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதியுடன் 55,447 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் ஊடாக 472.26 பில்லியன் ரூபா சுங்கவரி வருமானம் கிடைத்துள்ளது.
2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117 சதவீதத்தை பூர்த்திசெய்ய கிடைத்திருப்பதாக இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.
2025 செப்டெம்பர் 30ஆம் திகதியில் இலங்கை சுங்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 1485 பில்லியன் ரூபா என்றும், 1737 பில்லியனை ரூபாவை வருமானமாகப் பெற முடிந்திருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸநாயக்கவின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் இலங்கை சுங்கத்தின் வருமானம் கணிசமானளவு அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.
இதற்கு அமைய 2025 ஒக்டோபர் 14ஆம் திகதியாகும் போது வாகன இறுக்குமதியால் அதிக வருமானமாக 587.11 பில்லியன் ரூபா கிடைத்திருப்பதாகவும்,இது ஒட்டுமொத்த வருமானத்தில் 37 சதவீதம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதன்படி கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதியுடன் 55,447 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் ஊடாக 472.26 பில்லியன் ரூபா சுங்கவரி வருமானம் கிடைத்துள்ளது. 733 சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் இறக்குமதியின் மூலம் 48.67 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
ஒரு இலட்சத்து 42,524 மோட்டார் சைக்கிள் மற்றும் 15,035 முச்சக்கர வண்டிகளின் இறக்குமதியின் ஊடாக முறையே 30.3 பில்லியன் ரூபா மற்றும் 15.10 பில்லியன் ரூபா 1679 பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் வேன் ரக வாகன இறக்குமதியின் ஊடாக 12.66 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.





