நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை குறித்து விசாரணைக்குழு நியமிக்கப்பட்டமைக்க ஐ.நா.வரவேற்பு
கைதிகளின் சிகிச்சை, பாதுகாப்பு, நல்வாழ்வு தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளுடன் இலங்கை கொண்டுள்ள ஈடுபாடு, இச்சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு முக்கியமான கட்டமைப்பை வழங்குகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் குறித்த பின்னணிச் சூழலை ஆராய்வதற்காக, சுயாதீனக் குழுவொன்றை நியமிக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளதுடன், இக்குழுவின் கண்டுபிடிப்புகள் நாட்டின் சிறைச்சாலை கட்டமைப்பில் ஆக்கபூர்வமான, நீடித்த சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிஞ்சே வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறச்சாலை வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிரார்த்தக்கிறது.
சிறைச்சாலை அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் ஆற்றும் சேவைகளை முன்னெடுகின்றார்கள். அவர்கள் அரசாங்கத்துக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்யும் நோக்கில் கடினமான, சவாலான கடமைகளை மேற்கொள்கின்றனர்;, அவர்களின் இழப்பு ஆழமாக உணரப்படுகிறது.
மேலும், உயிரிழந்த, காயமடைந்த கைதிகள் அனைவரும் அரசாங்கத்தின் பராமரிப்பு, பாதுகாப்பின் கீழ் இருந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டுவதோடு சிறைச்சாலை பணியாளர்கள் மற்றும் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இத்தகைய பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும்.
இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசரத் தேவையை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சிறைக்கூடங்களில் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் நெருக்கடி, மரபு ரீதியான நடைமுறைகள் மோசமான தடுப்புக்காவல் நிலைமைகள் ஆகியவை இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள சிறைச்சாலை கட்டமைப்புக்களைப் பாதிக்கும் முக்கியமான சவால்களாக நீண்டகாலமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கைதிகளின் சிகிச்சை, பாதுகாப்பு, நல்வாழ்வு தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளுடன் இலங்கை கொண்டுள்ள ஈடுபாடு, இச்சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு முக்கியமான கட்டமைப்பை வழங்குகிறது.
இந்நிலையில் சிறைச்சாலை வன்முறைகள் குறித்த விசாரணைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சுயாதீனக்குழுவை வரவேற்பதோடு குழுவின் விசாரணைகள் சிறைச்சாலை முகாமை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலைமைகளில் உறுதியான மேம்பாடுகளுக்கு பங்களிப்பதற்கு முக்கியமானதாக இருக்கும்.
சிறைச்சாலை பாதுகாப்பை வலுப்படுத்துதல், தடுப்புக்காவல் வசதிகளுக்குள் நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின் நல்வாழ்வை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகள் உட்பட, தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம் இவ்விடயத்தில் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அர்ப்பணிப்புடன் உறுதியாக உள்ளது என்றுள்ளது.





