இலங்கை-ஜேர்மன் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்
தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அடிப்படையிலான கூட்டுறவை மேலும் பலப்படுத்துவதற்காக இணைந்து செயல்பட இருதரப்பும் இணக்கம் தெரிவித்தன.
ஜேர்மனியின் கூட்டாட்சியின் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் தெற்காசிய, தென்கிழக்காசிய மற்றும் ஓஷனியா பிராந்தியங்களுக்கான வெளிநாட்டு பொருளாதாரக் கொள்கைப் பிரிவின் பணிப்பாளரும் தலைவருமான டோபியாஸ் பியர்லிங்ஸ் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஜேர்மன் அரசு வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இலங்கையின் ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் ‘இலங்கை – ஜெர்மன் வர்த்தக மாநாடு 2026’ இன் முக்கியத்துவத்தை பியர்லிங்ஸ் அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினார்.
மூன்று நாட்கள் நடைபெறவிருக்கின்ற இந்த மாநாட்டில், இரு நாடுகளினதும் கொள்கை வடிவமைப்பாளர்கள், வர்த்தகத் தலைவர்கள், தொழில் சங்கங்கள் மற்றும் பல்வேறு மூலோபாயத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் உள்ளிட்ட சுமார் 350 மூத்த பங்குதாரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இம்மாநாடு இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் ஆழப்படுத்தி, பரஸ்பர நன்மைகளைப் பெற்றுத்தரும் முக்கிய தளமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிவரும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அடிப்படையிலான கூட்டுறவை மேலும் பலப்படுத்துவதற்காக இணைந்து செயல்பட இருதரப்பும் இணக்கம் தெரிவித்தன.
இலங்கையின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, தொழில்நுட்பக் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டிற்காக சிலோன் ஜெர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் வழங்கிவரும் பங்களிப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் ஜேர்மன் தூதரக அதிகாரிகள், இலங்கை சார்பில் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.





