எதிர்க்கட்சித்தலைவர் சஜித்தின் ஹஜ் பெருநாள் வாழ்த்து
ஹஜ் கொண்டாட்டத்தின் ஊடாக நமக்கு காட்டப்படும் உன்னதமான போதனைகள், இதற்கான பல முன்மாதிரியான வழிகாட்டல்களை நமக்கு வழங்கியுள்ளன.
பன்முகத்தன்மையில் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்லாமிய நாட்காட்டியின் துல்ஹஜ் மாதத்தில், இஸ்லாமிய பக்தர்கள் மக்காவிற்குச் சென்று மேற்கொள்ளும் வருடாந்த புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து, ஹஜ் பெருநாளைக் கொண்டாடுவது இஸ்லாமியர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே, ஹஜ் யாத்திரையின் ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும்.
பொருளாதார மற்றும் உடல் ரீதியான தகுதி வாய்ந்த ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். தனது ஆன்மாவை தூய்மைப்படுத்துதல், இறைவனுக்கு அடிபணிதல், உலக மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் காட்டுதல் மற்றும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுதல் ஆகியவையே இதன் நோக்கங்களாகும்.
ஹஜ் பெருநாளின் போது தேசம், நிறம், அந்தஸ்து போன்ற எந்தவொரு வேறுபாடும் இன்றி, ஒரே நோக்கத்துடன், ஒரே ஆடையை அணிந்து அதில் பங்கேற்பதன் மூலம் நமக்கு ஒரு ஆழமான வழிகாட்டல் வழங்கப்படுகிறது. அனைத்து மக்களின் இதயங்களிலும் அமைதியையும் நம்பிக்கையையும் மேம்படுத்துவதே ஹஜ் யாத்திரையின் முதன்மை நோக்கமாகும்.
இன்று நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கான காரணம், மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையாகும். இதனால் சிதைந்து போயிருப்பது அமைதியாகும். இந்த தருணத்தில் உலகம் முழுவதும் தோன்றியுள்ள யுத்த சூழ்நிலைகள், நம் இதயங்களில் அமைதியையும் நம்பிக்கையையும் மேலும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதையே நமக்கு உணர்த்துகின்றன.
அதேபோல், நமது தாய்நாட்டில் இந்த தருணத்தில் எதிர்காலம் குறித்த ஒரு நிச்சயமற்ற தன்மையும், ஒரு கடினமான காலகட்டத்தை நாம் கடக்க வேண்டியுள்ளது என்பதையும் காண முடிகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், நமது நாட்டை பிளவுகளால் அல்ல, ஒற்றுமையினாலேயே கட்டியெழுப்ப முடியும். உண்மையை உண்மையாகக் காண்பதற்கும், அதனை அச்சமின்றி வெளிப்படுத்திச் செயலாற்றுவதற்கும் தைரியமும் சக்தியும் தேவையாகும். இதற்காக அர்ப்பணிப்பு, தியாகம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணத்துடன் செயல்படுவது மிக முக்கியமான விடயமாகும்.
ஹஜ் கொண்டாட்டத்தின் ஊடாக நமக்கு காட்டப்படும் உன்னதமான போதனைகள், இதற்கான பல முன்மாதிரியான வழிகாட்டல்களை நமக்கு வழங்கியுள்ளன. இந்த தருணத்தில் அந்த வழிகாட்டல்களை சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுவது, ஹஜ் யாத்திரையின் உண்மையான அர்த்தத்தை நிறைவேற்றுவதாக அமையும்.
அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். பன்முகத்தன்மையில் ஒற்றுமையை மிகச்சிறப்பாகப் பிரதிபலிக்கும் இஸ்லாத்தின் உண்மையான போதனைகளின்படி வாழ்வோம். இலங்கையின் அனைத்து முஸ்லிம் சகோதர மக்களுக்கும் அமைதி மலரும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் என்றுள்ளது.





