முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கும் மேலதிகமாக 25,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது: அரசாங்கம்
உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மற்றும் முழுமையாக அங்கவீனமுற்றவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும்.
தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 6,056 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ஆனால் இவற்றுக்கு மேலதிகமாக மேலும் 25,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. எனினும் விரைவில் அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அத்தோடு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அறிவிக்கப்பட்ட 25,000 ரூபா மற்றும் 50,000 ரூபா கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கப்பட்ட பின்னர் ஏனைய கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 06-01-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தித்வா புயலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட 25 000 ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்கு 4 இலட்சத்து 52 658 வீட்டு அலகுகள் தெரிவு இனங்காணப்பட்டன. அவற்றில் 4 இலட்சத்து 15 818 வீட்டு அலகுகளுக்கு 25 000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. களுத்துறை, அம்பாந்தோட்டை, கண்டி, யாழ்ப்பாணம், மொனராகலை மாவட்டங்களில் 100 வீதம் இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களிலும் விரைவில் நிறைவு செய்யப்படும்.
இதேவேளை 50,000 ரூபா கொடுப்பனவுக்கு ஒரு இலட்சத்து 46 475 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 92 692 குடும்பங்களுக்கு இதுவரையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட 15,000 ரூபா கொடுப்பனவுக்கு 2 இலட்சத்து 541 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 1,13,581 விண்ணப்பதாரிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மற்றும் முழுமையாக அங்கவீனமுற்றவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும். வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சமும், காணியுடன் வீட்டை இழந்தவர்களுக்கு மேலும் 50 இலட்சமும் வழங்கப்படும். இவை தவிர இதுவரையில் 6,056 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இந்த வீடுகளுக்கும் மேலதிகமாக இன்னும் 25,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு தொகைகள் வழங்கப்படும் அதேவேளை, வீடுகளை இழந்தவர்களுக்கு அவற்றை நிர்மாணித்துக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்த பொறுப்பினை விரைவில் நிறைவேற்றுவோம் என்றார்.





