நான்கு தேரர்கள் உட்பட 9பேருக்கு 19வரையில் விளக்கமறியல்
கரையோரப் பாதுகாப்புத்திணைக்களத்தின் சார்பில் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி ஒருவரும்,பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பெளத்த மத கட்டுமானங்களை அமைத்து, அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலாங்கொட வனவாசி கசியப்ப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பொதுநபர்களை திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுடீன் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த நவம்பர் மாதம் கரையோர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி கடற்கரையில் கட்டுமானத்தை அமைத்தமை மற்றும் சிலையை வைத்தமை தொடர்பில் வனவாசி பலங்கொட கசியப்ப தேரர்,திருகோணமலை கோட்டை விகாராதிபதி கல்ஞாண வன்ச திஸ்ஸ தேரர்,சுகித்த வன்ச தேரர்,சிறிமாபுர விகாரையைச் சேர்ந்த நந்த தேரர் ஆகிய தேரர்களும்,கோட்டை விகாரையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான தீபானி லியனகே,விதுரங்க லொக்கு கலப்பதி,எல்.ரீ.பெரேரா,பியலால் பிறேமசிறி,தெக்கும் துலார குணதிலக்க ஆகியோருக்கும் விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து இவர்கள் அனைவரும் திருகோணமலை விளக்கமறியல்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுதிப்ப லியனகே,சுகத் பிரசன்ன ஆகிய மேலும் இருவர் எதிரிகளாக பெயரிடப்பட்டிருந்தனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை. இவர்கள் இருவர் தொடர்பில் எதிர் வரும் 19ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்று அறிவித்துள்ளது.
கரையோரப் பாதுகாப்புத்திணைக்களத்தின் சார்பில் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி ஒருவரும்,பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
கரையோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றிற்கு இல்லை. மேல்நீதிமன்றத்திற்கு மட்டுமே பிணை வழங்கும் அதிகாரம் உள்ளது.இதன்படி எதிராளிகள் பிணைக்கான கோரிக்கை விடுத்த போதும் பிணை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





