பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் - சாணக்கியன்
இவ்விரு மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று பல்வேறு தரப்பினரும் முன்வைத்துள்ள யோசனைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை உறுதி செய்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவி வகித்த எமது கட்சியின் செயலாளர் எம். எ சுமந்திரன் பழையத் தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக, 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தைத் திருத்துவதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
எவ்வாறாயினும், அப்போதிருந்த ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அதனை எடுத்துக்கொள்வதைப் பிற்போட்டதால், அந்த தனிநபர் பிரேரணை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் கடந்த ஆண்டு நான் சமர்ப்பித்த மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை குறித்து தற்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தது. அந்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபைத் தேர்தல் மிகவும் அவசியமானது. ஏனெனில் இவ்விரு மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது.
மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறைமைக்கு அமைய நடத்தலாம் என்று சகல தரப்பினரும் வலியுறுத்துகிறார்கள். சட்டமா அதிபர் திணைக்களமும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் தான் பாராளுமன்ற விசேட செயற்குழுக்கு யோசனை முன்வைத்துள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.





