இந்திய துணை ஜனாதிபதியுடன் மலையக கட்சித் தலைவர்களர் சந்திப்பு
இந்திய துணை ஜனாதிபதியுடனான சந்திப்பானது, கடந்த காலங்களில் இந்திய தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பக்களின் தொடர்ச்சியானதாகும்.
இந்திய வம்சாவழி மக்களின் அரசியல், பொருளாதார சமூக மேம்பாட்டிற்கான ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்க வேண்டிய தார்மீக கடமை இந்தியாவுக்கு காணப்படுகின்றது என்பதை வலியுறுத்திய மலையக கட்சிகளின் தலைவர்கள் அத்தோடு கடல்-கடந்த இந்திய குடியுரிமை இலகு படுத்தும் வகையில் இந்திய துணைஜனாதிபதி ஆறு தலைமுறையினரை மையப்படுத்திய அறிவிப்பை வெளிப்படுத்தியமையை வரவேற்று நன்றிகளையும் தெரிவித்தனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு மலையக தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், கூட்டணின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், அரசியல்குழு உறுப்பினர்களான பாரத் அருள்சாமி, இராஜாராம் இராதாகிருஷ்ணன் ஆகியோரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் மனோகணேசன் தெரிவிக்கையில், இந்திய துணை ஜனாதிபதியுடனான சந்திப்பானது, கடந்த காலங்களில் இந்திய தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பக்களின் தொடர்ச்சியானதாகும்.
குறிப்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தபோதும், அவரைத்தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வருகை தந்திருந்தபோதும் இந்திய வம்சாவழி மக்கள் ஏனைய மக்கள் சமூகங்களுடன் பார்க்கையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்பதை தெளிவுபடுத்தியிருந்தேன்.
உதாரணமாக, தென்னாபிரிக்கா, பீஜி தீவுகள், மொறிசியஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழுகின்ற இந்திய வம்சாவழி மக்கள் அந்தந்த நாடுகளின் அரசாங்களுடன் நெருக்கமாக இருக்குமளவுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவிலிருந்து வருகை தந்து வாழும் இந்திய வம்சாவழி மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. அவர்களின் குடியுரிமைகள் கூட முழுமையாக்கப்பட்டிருக்கவில்லை.
வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சுயநிர்ண உரிமைகள் போராட்டங்களுக்குப் பின்னர் சிங்கப் பெருந்தேசிய தரப்பினரால் வழங்கப்படவில்லை. இதனால் இருதரப்பு முரண்பாடுகளுக்குள் இந்திய வம்சாவழி மக்களாகிய நாங்கள் சிக்கியுள்ளோம். வட,கிழக்கிலும் இந்திய வம்சாவழி மக்கள் கணிசமாக பல்வேறு காரணங்களால் அங்கு நிரந்தரமாக குடியேறி வாழுகின்ற சூழல்கள் காணப்படுகின்றன.
அதாவது,சிங்கள பெருந்தேசிய தரப்பினர் எம்மையும், வடக்கு,கிழக்கு தமிழ் மக்களையும் ஒன்றாகவே பார்க்கின்றது. அவ்வாறு பார்ப்பதில் எமக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால் எமது பிரச்சினைகளை தீர்ப்பதில் அது சிக்கலான நிலைமைகளை உருவாக்கி அது இன்னமும் நீடித்துக்கொண்டே இருக்கின்றது.
ஆகவே இந்திய வம்சாவழி மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதாக இருந்தால் அவர்களின் குடியுரிமைப் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும். அதனடிப்படையில் தான் அவர்கள் மேலே குறிப்பிட்ட நாடுகளில் உள்ள இந்திய வம்சாவழி மக்களைப் போன்று வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தவராக வாழ்வாதரத்தில் மேம்பட்டவர்களாக உருவெடுக்க முடியும்.
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் போது எமது சமூகத்தில் 50சதவீதமானவர்கள் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். அவர்களின் நாடுகடத்தில் எம்முடன் கலந்தாலோசிக்கப்படாத விடயமாகும். இந்த நிகழ்ச்சி நடைபெறாது விட்டால் எண்ணிக்கையில் சிறுபான்மை தமிழர்களாகியிருக்க மாட்டோம். பாராளுமன்றில் 40 பிரதிநிதித்துவத்தை குறைந்த பட்சம் கொண்டிருந்திருப்போம்.
அவ்வாறன நிலைமைகள் காணப்பட்டிருந்தால் வட,கிழக்கு பிரதிநிதிகள், முஸ்லிம் பிரதிநிதிகள் என்று 75 முதல் 100 பிரதிநிதித்துவங்கள் பாராளுமன்றில் இருந்திருக்கும். அவ்வாறான நிலையில் இனப்பிரச்சினை தற்போதைய அளவுக்கு கூர்ப்படைந்திருக்காது. ஆகவே இந்தியாவுக்கு இந்திய வம்சாவழி மக்களின் அரசியல், பொருளாதார சமூக மேம்பாட்டில் பாரியளவிலான ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் வழங்க வேண்டிய தார்மீக கடமை காணப்படுகின்றது.
அதேநேரம், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில், அவர்களுக்கு இலகுவாக கடல் கடந்த இந்திய குடியுரிமை அந்தஸ்தை வழங்குவதற்கான இலகுபடுத்தல்களை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த வகையில் ஆறு தலைமுறையினருக்கான அந்தஸ்கை அங்கீகரிக்கும் முடிவொன்றை இந்திய துணை ஜனாதிபதி வெளியிட்டிருக்கின்றார். அதற்கு எமது வரவேற்பையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் இந்திய தூதரகத்தில் செயற்படும், இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை என்ற நிறுவனத்தின், நோக்கங்களை விரிவு படுத்தி, மலையக கல்வி வளர்ச்சிக்கான அனைத்து உதவிகளையும், இந்த இந்நிறுவனத்தின் ஊடாக செய்ய வேண்டும் என்றும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்காக,வீடமைப்பு,பாடசாலை கல்வி,புலமை பரிசில்கள், பாடசாலை பௌதிக வளங்கள், பல்கலைக்கழக வளாக ஸ்தாபிதம், இந்தியாவின் நவோதயா பாடசாலை திட்டத்தின் அடிப்படையில் ஆங்கில மொழி மூல சர்வதேச இந்து பாடசாலை, ஆசிரியர் பயிற்சி கலாசாலை,தாதியர் பயிற்சி கலாசாலை,தொழில்-நுட்ப பயிற்சி கலாசாலை, ஆகிய பல்நோக்கு விடயங்களையும் இந்தியா தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம் என்றார்.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கையில், இந்தியாவின் புதுடில்லியில் அவரைச் சந்தித்தபோது மலைய மக்கள் சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். அதன்தொடர்ச்சியாக மகஜரொன்றை எமது மக்கள் சார்பில் கையளித்திருந்தேன். மேலும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளி மற்றும் தமிழ் பாரம்பரிய சமூகங்களின் நலன் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் அடிப்படையில் அனைத்து ஒத்துழைப்புக்களையும் இந்தியா வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன் என்றார்.





