ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலை எதிர்த்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டங்கள்
ஈரான் அணுவாயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக அமெரிக்கா கூறினாலும், அதற்கு எங்கும் ஆதாரங்கள் இல்லை.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் எதிர்ப்பையும், ஈரானுடனான உடன்நிற்பையும் வெளிப்படுத்தி நேற்றைய தினம் கொழும்பில் 3 இடங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அவற்றில் தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைக்கான ஈரானியத்தூதுவர் அலிரெஸா டெல்கோஷ், இலங்கை மக்களின் ஆதரவுக்கு தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த மாதம் 28 ஆம் திகதி ஈரானிய உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்களின் நீட்சியாக, ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ் டேனா' போர்க்கப்பல் 04-03-2026 இலங்கையின் காலி நகருக்குத் தெற்கே சுமார் 40 மைல் தொலைவில் அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் நடத்திய தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து இலங்கையிலும் பதற்ற சூழ்நிலையொன்று உருவாகியிருக்கும் பின்னணியில், ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுக்கு எதிர்ப்பையும், இக்கடினமான வேளையில் ஈரானுடனான உடன்நிற்பையும் வெளிப்படுத்தி நேற்று வெள்ளிக்கிழமை (6) கொழும்பில் மூன்று இடங்களில் கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன்படி கொழும்பில் அமைந்துள்ள தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்பாக 06-03-2026 அன்று ஜும்மா தொழுகையின் பின்னர் 'சுதந்திர பலஸ்தீனத்தின் நண்பர்கள்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப்போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு ஈரானுக்கு தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.
அப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் 'எண்ணெய்க்காக இரத்தம் சிந்தவேண்டாம்', 'அமெரிக்க - இஸ்ரேல் பயங்கரவாதத்தை நிறுத்து', 'ஈரான் மீது போர் தொடுப்பதை அமெரிக்கா - இஸ்ரேல் நிறுத்தவேண்டும்', 'சியோனிஸவாதத்தைத் தோற்கடிப்போம்', 'அமெரிக்க - இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்ப்போம்', 'அமைதியான உலகைக் கட்டியெழுப்ப சியோனிஸத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம்', 'நாம் பலஸ்தீனம், ஈரானுடன் தோளோடு தோள் நிற்கிறோம்' எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் 'எமக்கு போர் வேண்டாம், அமைதியே வேண்டும்' என்றவாறு கோஷங்களையும் எழுப்பினர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்நாடுகளின் எதேச்சதிகார போக்குக்கு எதிரான வலுவான நிலைப்பாட்டை உலகநாடுகள் எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதேபோன்று போருக்கு எதிரான தமது வலுவான நிலைப்பாட்டையும், ஈரானுக்கான ஆதரவையும் வெளிப்படுத்தி இப்போராட்டத்தில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட செயற்பாட்டாளர் ஷியாம், இப்போர் முடிவுக்குவரும் வரை தமது எதிர்ப்பும், ஈரானுடனான உடன்நிற்பும் தொடரும் எனத் தெரிவித்தார்.
அதேவேளை இடைநடுவே இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் போராட்டக்களத்துக்கு வருகைதந்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மேலும் உரத்துக் கோஷங்களை எழுப்பினர். அப்போராட்டத்தை ஒருங்கிணைத்து ஈரானுடனான உடன்நிற்பை வெளிப்படுத்தியமைக்கு நன்றி கூறும் வகையில் சற்று நேரம் அவ்விடத்தில் போராட்டக்காரர்களுடன் நின்ற தூதுவர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து 'அமெரிக்க மற்றும் சியோனிஸ பயங்கரவாதிகளால் ஈரானுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு எதிராக நிற்போம்' எனும் மகுடத்தில் சிவில் செயற்பாட்டாளர்கள், சோசலிஸ மக்கள் முன்னணி மற்றும் இலங்கை கம்யூனிஸ கட்சி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்புப்போராட்டம் நேற்று பி.ப 2.30 மணியளவில் கொழும்பிலுள்ள ஈரானியத் தூதுரகத்துக்கு முன்பாக நடைபெற்றது.
அங்கு 'அமெரிக்காவே, உனது கைகளில் அப்பாவிகளின் இரத்தம்' எனும் வாசகம் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியிருந்த போராட்டக்காரர்கள், 'இந்த யுத்தத்தை உடன் நிறுத்துங்கள்', 'போராடும் ஈரானிய வீரர்களுக்கு எமது ஆதரவு', 'உலக சமாதானமே எமது தேவை' என்றவாறு கோஷங்களையும் எழுப்pனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்று கருத்துரைத்த இலங்கை கம்யூனிஸ கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி ஜி.வீரசிங்க, 'ஈரானை இலக்குவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து முன்னெடுத்துவரும் இந்த யுத்தத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இவ்விடயத்தில் அமெரிக்கா ஏதேச்சதிகாரப்போக்கிலும், இஸ்ரேல் பாசிஸவாதப்போக்கிலுமே செயற்பட்டுவருகின்றன. குறிப்பாக ஈரானில் பாடசாலைகள் உள்ளடங்கலாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களை இலக்குவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது மிகமோசமான செயற்பாடாகும். ஈரான் அணுவாயுத உற்பத்தியில் ஈடுபடுவதாக அமெரிக்கா கூறினாலும், அதற்கு எங்கும் ஆதாரங்கள் இல்லை. அண்மையில் வெனிசூவேலா ஜனாதிபதியை அமெரிக்கா சிறைப்பிடித்தது. எனவே இங்கு பொருளாதார ரீதியில் பின்னடைவுக்கு முகங்கொடுத்துவரும் அமெரிக்கா எண்ணெய் மற்றும் எரிபொருள் வளம் நிறைந்த நாடுகளை வேறு காரணங்களைக்கூறி இலக்குவைக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இந்த யுத்தத்தை நாம் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும்' என்றார்.
இது இவ்வாறிருக்க சிவில் செயற்பாட்டாளர்களால் நேற்று காலை 10.30 மணியளவில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப்போராட்டத்தின்போது, இந்தியாவின் விசாகபட்டினத்தில் நடைபெற்ற 'மிலான் 2026' பயிற்சி மற்றும் அணிவகுப்பில் கலந்துகொண்டு நாடு திரும்பிய ஈரானுக்குச் சொந்தமான 'ஐரிஸ் டேனா' கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டங்களுக்கு முற்றிலும் முரணானதாகும் எனச் சுட்டிக்காட்டிய செயற்பாட்டாளர்கள், அதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தனர்.





