வாக்குகளுக்காக வடக்கில் தேசிய மக்கள் சக்தி நாடகம் - நாமல்
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் அநாதரவாக கைவிடப்படும் பாரம்பரியம் தொடர்வது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
தேர்தல் காலத்தில் தமிழ் தேசியவாத வாக்குகளைக் கவர்வதற்காக, தடைசெய்யப்பட்ட தமிழீல விடுதலைப் புலிகள் அமைப்பைப் பெருமைப்படுத்தும் வகையிலான பாடலைப் தேசிய மக்கள் சக்தி பயன்படுத்தியிருக்கிறது. ஆனால், தற்போது அந்தப் பாடல் தம்மால் தயாரிக்கப்பட்டது அல்ல என்று கூறி, அதிலிருந்து நழுவப் பார்க்கின்றனர். இந்த பாடல் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக தளத்தில் விடுத்துள்ள பதிவிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக, எல்.டி.டி.ஈ அமைப்பைப் பெருமைப்படுத்தும் வகையிலான பாடலொன்றை தேசிய மக்கள் சக்தி பயன்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது அந்தப் பாடலைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்த அதே யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர், இப்பாடல் தேசிய மக்கள் சக்தியால் தயாரிக்கப்பட்டது அல்ல என்று கூறி, அதிலிருந்து நழுவப் பார்க்கிறார்.
அவர் கூறுவது உண்மையெனில், நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றை ஊக்குவிக்கும் வகையில் இப்பாடலை உருவாக்கியது யார், அதனைப் பரப்பியது யார் என்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகப் பரந்தளவிலான விசாரணைகளை நடத்த வேண்டும். அத்துடன், இந்தச் சதிக்குப் பின்னால் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் அநாதரவாக கைவிடப்படும் பாரம்பரியம் தொடர்வது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
ஆனால், எங்களைப் பொறுத்தவரை வடக்கு - கிழக்கு மக்களின் விடயத்தில் நாங்கள் எப்போதும் இரட்டை வேடம் போட்டதில்லை, நேர்மையாகவே இருந்துள்ளோம். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், காணிப் பிரச்சினைகள், அபிவிருத்திகள் மற்றும் இளைஞர்களாக இருந்தபோது தவறாக வழிநடத்தப்பட்ட முன்னாள் எல்.டி.டி.ஈ போராளிகளின் விடுதலை என அனைத்து விடயங்களிலும் எங்களது நேரடி நிலைப்பாட்டை நாங்கள் வெளிப்படையாகக் கூறினோம்.
அரசியல் ரீதியாக எங்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், நாங்கள் எந்த நாடகமும் ஆடாமல் உண்மையை மட்டுமே பேசினோம். எங்களது கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், நாங்கள் எங்கு நிற்கிறோம் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009ஆம் ஆண்டு முதல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மறுமலர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் நான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறேன். அரசியல் இலாபங்களுக்கு அப்பாற்பட்டு, அங்கு வாழும் எனது சகோதர, சகோதரிகளுக்கான எனது அர்ப்பணிப்பு மற்றும் சேவை என்றும் தொடரும் என நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





