இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம்
அனுபவங்கள் மற்றும் கற்றறிந்த விடயங்களை உயர்ஸ்தானிகருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
கடந்த மே மாதத்தில் இக்குழுவினர் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பெற்றுக் கொண்ட அனுபவங்கள் மற்றும் கற்றறிந்த விடயங்களை உயர்ஸ்தானிகருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்பின் போது பாலின வரவுசெலவுத் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மேம்பாடு, பெண்களின் தலைமையிலான வளர்ச்சித் திட்டங்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இரு நாடுகளினதும் பெண் பிரதிநிதிகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





