வட, கிழக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆயிரம் மில்லியன் டொலர் நிதியுதவி
இலங்கை அரசுக்கும் உலக வங்கிக் குழுமத்திற்கும் இடையில் இடம்பெற்ற கடன் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளது.
வடக்கு,கிழக்கில் ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆயிரம் மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 11-08-2026 அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில், உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி 2026 – 2031 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2026.02.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கிடைக்கப்பெற்ற அங்கீகாரத்தின் பிரகாரம், இலங்கை அரசுக்கும் உலக வங்கிக் குழுமத்திற்கும் இடையில் இடம்பெற்ற கடன் உடன்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளது.
இவ் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதார ஆற்றல்வளங்களுடன் கூடிய வகுதிகளைப் பலப்படுத்தல், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரை ஊக்குவித்தல், பொருளாதார வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் தொடர்புகளை விரிவாக்கம் செய்வதன் மூலம், மக்களுடைய வாழ்வாதாரங்களை அதிகரித்தல், பேண்தகு பிராந்திய அபிவிருத்தியின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தல் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, உத்தேச வேலைத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நிதி ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.





