துப்பாக்கிச்சூடுகளை பாதாள உலகக் குழுக்கள் மீது சுமத்தி தப்பிக்க முற்பட வேண்டாம்: எதிர்க்கட்சி வலியுறுத்தல்
குறிப்பாக இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு பொலிஸ்மா அதிபரும் இந்தளவுக்கு அரசியல் மயப்படுத்தப்பட்டவராக இருக்கவில்லை.
 
        
நாட்டில் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நாட்டில் ஏற்படவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிக்கு என்ன ஆனது? எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டாலும் அது பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையது எனக் கூறி தப்பிக்க முற்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 29-10-2025 அன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தற்போதைய அமைச்சர்களும், ஆளுந்தரப்பு எம்.பி.க்களும் தேர்தலுக்கு முன்னர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். அதனைக் கூறியே ஆட்சியையும் கைப்பற்றினர். எதிர்க்கட்சியினருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் கற்பிப்பதாகவும் கூறினர். ஆனால் இவர்கள் ஆட்சியமைத்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு எந்த நிலையிலிருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
அன்றாடம் இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூடுகளால் மக்களின் உயிருக்கு எந்தளவு அச்சுறுத்தல் ஏற்பட்டள்ளது என்பதை நாம் அறிவோம். கடந்த ஒரு வருடத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுள்ளதோடு, 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக பிரதேசசபைத் தலைவர் ஒருவர் தனது அலுவலகத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அதற்கு முன்னர் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குள் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நாட்டில் ஏற்படவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிக்கு என்ன ஆனது? எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டாலும் அது பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடையது எனக் கூறி விடுகின்றனர்.
உண்மையிலேயே அந்த சம்பவங்கள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவையாகக் காணப்பட்டாலும், அதற்கான பொறுப்பு கூறலிலிருந்து அரசாங்கத்தால் விலக முடியாது. எனவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருப்பதை விடுத்து, இனிவரும் காலங்களை இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது.
குறிப்பாக இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு பொலிஸ்மா அதிபரும் இந்தளவுக்கு அரசியல் மயப்படுத்தப்பட்டவராக இருக்கவில்லை. அரச அதிகாரியான அவருக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டிய அவசியமில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக உறுதியாகியுள்ளது. அதற்கு காரணம் பாதாள உலகக் குழுவினருடனான தொடர்பு என பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் கூறுவதைப் போலவே பொலிஸ்மா அதிபரும் எதிர்க்கட்சியினருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் ஜே.வி.பி.யின் பெலவத்த அலுவலகத்துக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட மேலும் பல மக்கள் பிரதிநிதிகளுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பக்கசார்பான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றார். 





 
  
