வாக்குறுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக மீறும் அரசாங்கம் - ஆனந்த பாலித
பாதாள உலகக் குழுக்கள் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல்களை முற்றாக ஒழிப்போம் என ஜனாதிபதி பெரும் வாக்குறுதிகளை அளித்த போதிலும் நடைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
76 வருட கால அரசியலை ஒழித்த விட்டு நாட்டை மீளக் கட்டியெழுப்புவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது ஒரு வருடத்தை பூர்த்தி செய்யும் நிலையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறி வருகின்றது என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.
கொழும்பில் 11-05-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சார கட்டணத்தை 31 சதவீதத்தால் குறைப்பதாகக் கூறி விட்டு அதற்கு மாறாக 18 சதவீதத்தால் கட்டணத்தை அதிகரித்து பொது மக்களை இருளுக்குள் தள்ளி அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ போன்ற புதிய திட்டங்கள் ஊடாக நாட்டைத் தூய்மைப்படுத்துவதாக கூறினாலும், எங்குமே தூய்மையான இடங்களை காண முடியவில்லை. அதேபோன்று பாதாள உலகக் குழுக்கள் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல்களை முற்றாக ஒழிப்போம் என ஜனாதிபதி பெரும் வாக்குறுதிகளை அளித்த போதிலும் நடைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இலஞ்ச ஊழல்களை ஒழித்து திருடர்களை பிடிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை. திருடர்களை பிடிப்பதாக கூறிவிட்டு ஆடசிக்கு வந்த அரசாங்கத்தின் முன்னணி தலைவர்கள் சிலர் தற்போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அல்லது ஏனைய குற்றவாளிகளுக்கு எதிராக இதுவரை முறையான வழக்குகள் தாக்கல் செய்யபட்டு தண்டனை வழங்கப்படவில்லை. வாராந்தம் பல வாக்குறுதிகளை அரசாங்கம் மீறி வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் காணப்படுகின்றனர் என்றார்.





