ஐ.நா. வதிவிட பிரதிநிதி எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
இந்த சந்திப்பில், சமகால இலங்கையின் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே ஃபிராஞ்சிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்நாட்களில் வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், சர்வதேச முகவராண்மைகளின் இலங்கைப் பிரதானிகள் மற்றும் பல அரச சாரா நிறுவனங்களின் இந்நாட்டுப் பிரதானிகள் என பலரையும் சந்தித்து வருகிறார்.
அதற்கமையவே இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃபிராஞ்சைச் சந்தித்தார். இந்த சந்திப்பில், சமகால இலங்கையின் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அனர்த்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் நாட்டில் எழுந்துள்ள பன்முக பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்சிடம் எடுத்துரைத்தார்.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் பெற்று தர முடியுமான கூடிய ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் பெற்று தருமாறும், இதுவரை காலமும் ஐ.நா. வழங்கிய ஆதரவுகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் உதவிகளுக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் குறிப்பிட்டார்.





