தேசிய வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் - அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த
தேசிய வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள் அத்தியாவசியமான ஒன்றாகும்.
வெற்றிகரமான கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதும், அவற்றுக்கு தேசிய அளவில் பெறுமதி சேர்த்து நாட்டின் மேம்பாட்டிற்கு வழிவகுப்பதுமே தமது அமைச்சின் பிரதான நோக்கமாகும். தேசிய வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள் அத்தியாவசியமான ஒன்றாகும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச நினைவு மாநாட்டு மண்டபத்தில் நேற்று (19) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கண்டுபிடிப்பு முகவர் நிலையத்தினால் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்காக தயாரிக்கப்பட்ட இரண்டு தேசிய கண்டுபிடிப்பு அறிக்கைகளை வெளியிடும் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் பதில் செயலாளர் மகேஷ் கம்மன்பில உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவல, தேசிய கண்டுபிடிப்பு முகவர் நிலையத்தின் தலைமை கண்டுபிடிப்பு அதிகாரி மருத்துவர் முதித செனரத் யாப்பா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் முன்னாள் செயல்பாட்டுக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
தேசிய கண்டுபிடிப்பு முகவர் நிலையத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கண்டுபிடிப்பு வவுச்சர் திட்டத்தின் கீழ் முதற்கட்ட வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது. இதற்கமைய தனிநபர்கள் மற்றும் குழுக்கள் அடங்கலாக தேர்வு செய்யப்பட்ட 11 பயன்பாட்டாளர்களுக்கு நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரால் இந்த நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வணிகமயமாக்கல் நோக்கிய பயணத்தில் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப அல்லது ஏனைய தடைகளைக் கடந்து செல்வதற்கு இந்த கண்டுபிடிப்பு வவுச்சர்கள் மூலம் இலக்கு வைக்கப்பட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
நிகழ்வில் தொழில்நுட்ப அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையின் தேசிய கண்டுபிடிப்புச் சூழலை வலுப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான முதன்மை நிறுவனமாக தேசிய கண்டுபிடிப்பு முகவர் நிலையம் செயற்படுகின்றது.
இலங்கை எதிர்கொள்ளும் புதிய கண்டுபிடிப்புகளின் நிலைமை, முன்னேற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்த தேசிய அளவிலான புரிதலை வழங்குவதையும், தேசிய வளர்ச்சிக்கு கண்டுபிடிப்புகள் வழங்கும் பங்களிப்பை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தேசிய கண்டுபிடிப்பு அறிக்கையை இந்நிறுவனம் வெளியிடுகின்றது. குறிப்பிட்ட ஆண்டுகளில் வெற்றிகரமாக வணிகமயமாக்கப்பட்ட அல்லது நடைமுறைப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் அவை நாட்டிற்கும் சமூகத்திற்கும் வழங்கிய பங்களிப்புகள் குறித்த பெறுமதிமிக்க தகவல்களை இந்த அறிக்கை வழங்குகின்றது.
நாடு முழுவதும் இடம்பெற்ற 70 க்கும் மேற்பட்ட உண்மை நிகழ்வுகள் இந்த இரு அறிக்கைகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை வெறும் கருத்துகள் அல்லது புதிய கண்டுபிடிப்பு தொடர்பான நிகழ்வுகளுடன் மட்டும் நின்றுவிடாமல்; பொருட்கள், சேவைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வணிகங்களாக வெற்றிகரமாக மாற்றமடைந்து, வருவாயை ஈட்டி இலங்கை பொருளாதாரத்திற்கு பெறுமதியைச் சேர்க்கும் கண்டுபிடிப்புகளின் உண்மை வெற்றி உதாரணங்களாகும்.
தேசிய வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள் அத்தியாவசியமான ஒன்றாகும். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்தல், புதிய தொழில்துறைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொதுச்சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய தீர்வுகளை வழங்குவதற்கு நாம் உதவி வருகின்றோம். அதற்கு இலங்கைக்கு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட கண்டுபிடிப்புச் சூழல் அவசியமாகிறது. அந்த அமைப்பைக் கட்டியெழுப்பி, எமது கண்டுபிடிப்புகளை தேசிய வளர்ச்சிக்கு மேலும் வலுவாக பங்களிக்கச் செய்வதே எமது இலக்காகும் என்றார்.





