தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 56 000 மாணவர்கள் சாதனை
மாணவர்களுக்கான தனிப்பட்ட பெறுபேற்றுச் சான்றிதழ்கள் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே பாடசாலைகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தரம் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இப்பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. பரீட்சைக்கு மொத்தம் 2,94,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 2,89,867 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
பரீட்சார்த்திகள் தங்களது சரியான சுட்டெண்ணைப் பயன்படுத்தி பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றின் மூலம் பெறுபேறுகளைப் பார்வையிடவும், பெறுபேற்று அட்டவணையைத் தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதியைப் பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை மொத்தம் 20,000 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் உதவிப்பணம் வழங்கப்படவுள்ளதுடன், அதில் 250 புலமைப்பரிசில்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பெற்ற மொத்தப் புள்ளிகள், மாவட்டம் மற்றும் மொழிமூலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உரிய வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
அனைத்துப் பாடசாலை அதிபர்களும், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் https://onlineexams.gov.lk/eic எனும் இணைய இணைப்பின் ஊடாகத் தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தித் தமது பாடசாலைகள் மற்றும் வலயங்களுக்குரிய பெறுபேற்றுப் பத்திரங்களைத் தரவிறக்கம் செய்து பார்வையிட முடியும்.
மாணவர்களுக்கான தனிப்பட்ட பெறுபேற்றுச் சான்றிதழ்கள் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே பாடசாலைகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். புள்ளிகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழியில் சமர்ப்பிப்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
இது குறித்த மேலதிக விசாரணைகளுக்கு 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தையோ அல்லது 0112785922, 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்களையோ தொடர்புகொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளிகள்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இது தொடர்பில் குறிப்பிடுகையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல், கேகாலை மாவட்டங்களுக்கு சிங்கள மொழி மூலம் வெட்டுப்புள்ளி 139, தமிழ் மொழி மூலம் 135 ஆகும். அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு சிங்கள மொழி மூலம் 135, தமிழ் மொழி மூலம் 133 வெட்டுப்புள்ளியாகும். பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு சிங்கள மொழி மூலம் 135, தமிழ் மொழி மூலம் 133 வெட்டுப்புள்ளியாகும்.
அம்பாறை, திருகோணமலை, நுவரெலியா, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களுக்கு சிங்கள மொழி மூலம் 133 வெட்டுப்புள்ளிகளாகும். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தமிழ் மொழிக்கான வெட்டுப்புள்ளிகள் 133 ஆகும். 213 287 மாணவர்கள் 70 புள்ளிகளை விட அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
அவதானிக்கும் போது சப்ரகமுவ மாகாணத்தில் 77.37 சதவீதமானோரும், தென் மாகாணத்தில் 75 சதவீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 75 சதவீதமானோரும், ஊவா மாகாணத்தில் 74 சதவீதமானோரும், மேல் மாகாணத்தில் 73 சதவீதமானோரும், மத்திய மாகாணத்தில் 73 சதவீதமானோரும், வடமத்திய மாகாணத்தில் 70 சதவீதமானோரும், வட மாகாணத்தில் 69 சதவீதமானோரும், கிழக்கு மாகாணத்தில் 67 சதவீதமானோரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்டுள்ளனர்.
குருணாகல் மாவட்டத்தில் சிங்கள மொழி மூலம் பரீட்சை தோற்றிய பரீட்சாத்தி 193 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இது நாடளாவிய ரீதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதி கூடிய புள்ளியாகும். தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 188 அதிகூடிய புள்ளி பெறப்பட்டுள்ளது என்றார்.





