தமிழின படுகொலையை சர்வதேச தரப்புக்கள் ஏற்பதில் தொடர்ந்தும் தயக்கம் காண்பிக்கின்றன - கஜேந்திரகுமார்
செம்மணி இனப்படுகொலை நடைபெற்றுள்ளமைக்கான சான்றாதாரமாக மாறியிருக்கின்றது.
கனடா, பிரித்தானியா தவிர ஏனைய சர்வதேச தரப்புக்கள் தமிழினப் படுகொலை நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவதுடன் எங்கெங்கெல்லாம் அதனை தவிர்க்க முடியுமோ தவிர்த்து வருகின்றது என்று தமிழ்த் தேசியப்பேரவையின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பட்டால் செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி 13-09-2026 அன்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின் இறுதியில் நல்லூர் கிட்டுபூங்காவில் 'தமிழ் மக்களின் நீதிக்கான குரல்' எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றோம், சர்வதேச விசாரணையை ஐ.நா.பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரகடனக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் இனப்படுகொலையுடன் மௌனிக்கப்பட்டது. அன்றிலிருந்து இனப்படுகொலை நடைபெற்றமைக்கான சாட்சியங்களை எத்தனையோ இடங்களில் வெளிப்படுத்தியும் தமிழினப்படுகொலை நடைபெற்றது என்பதை சர்வதேச சமூகம் ஏற்க மறுத்து வருகிறது.
எமது தாயகத்தில் தமிழினத்தை இலக்கு வைத்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையொன்று அரங்கேற்ற ஆரம்பித்ததை அடுத்தே ஆயுதப்போராட்டத்துக்கு தள்ளப்பட்டோம். அதன்பின்னர் முள்ளிவாய்க்காலில் அந்த இனப்படுகொலை உச்சமடைந்து தற்போதும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. இதனை ஆதராங்களுடன் வெளிப்படுத்தியுள்ளபோதம் சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகின்றது.
கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளைத்தவிரவும் ஏனைய தரப்பினர் எந்ததெந்த இடங்களிலெல்லாம் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை என்பதை எங்கெங்கெல்லாம் தவிர்க்கலாமோ தவிர்த்துக்கொண்டு வருகின்றார்கள். அப்படியாதொனரு சூழலில் தான் செம்மணியில் அரங்கேற்றப்பட்ட படுகொலையின் சாட்சியங்களும், ஆதாரங்களும் வெளிவர ஆரம்பித்துள்ளது.
1996ஆம் ஆண்டு பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் கோவம் கொண்டு தான் செம்மணியில் 600இற்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்ற விடயத்தினை வெளிப்படுத்தினார்கள்.
அவர்கள் அந்த தகவலை வெளியிட்டமைக்கு காரணம், அரசின் ஆணையின் பிரகாரம் தாங்கள் கொலைகளை செய்தபோதும் அரசு தங்களை காப்பாற்றவில்லை என்ற கோவமாகும். அவர்கள் விடயத்தினை வெளிப்படுத்தியபோதும் அன்றிலிருந்து இன்றுவரையில் செம்மணி விடயத்தினை மூடி மறைப்பதற்கே அத்தனை சிங்கள அரசுகளும் நடவடிக்கைகளை எடுத்திருந்தன.
பின்னர், கட்டட நிர்மாணத்திற்கான நடவடிக்கைகளின் போது எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. கிருபாகரன் அதனை கண்டறிந்து எம்மைத்தொடர்பு கொண்டு விடயங்களை கூறினார். அதன்பின்னர் நாம் ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தினோம். கிருபாகரன் பொலிஸாரிடத்தில் இந்த விடயத்தினை முறைப்பாடு செய்வதற்கு முனைந்தபோது பொலிஸார் முறைப்பாட்டை ஏற்பதற்கு மறுத்தார்கள். ஆனாலும் எம்மால் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட அழுத்தங்கள் தற்போது அந்தப்பகுதியில் 600 எலும்புக்கூடுகளை கண்டறிவதற்கு வழிவகுத்துள்ளது.
எமது தேசத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது என்று நாங்கள் கூறிக்கொண்டு வந்தபோது எம்மவர்களிலேயே ஒருசிலர் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை என்றே கூறினார்கள். ஆனால் செம்மணி இனப்படுகொலை நடைபெற்றுள்ளமைக்கான சான்றாதாரமாக மாறியிருக்கின்றது.
அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் சமாதான உடன்பாடு எட்டப்படுகையில் அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு போர் நடைபெற வேண்டும் என்று அழுத்தமளித்து இராணுவ ஆட்சேர்ப்புக்கு உதவிய ஜே.வி.பி.யினர் தான் தற்போது ஆட்சியில் இருக்கின்றார்கள்.
ஜே.வி.பியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க, ஆட்சிக்கு வந்ததன் பின்னர் போருடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான எந்தவொரு இராணுவ சிப்பாயும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று பல இடங்களில் கூறியுள்ளார்.
அத்தகைய தலைவரின் ஆட்சிக்காலத்தில் தான் செம்மணியில் எலும்புக்கூடுகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. அதேநேரம், சிங்கள மக்கள் இந்த தலைவரின் அரசாங்கத்தினர் நீதித்துறையை அரசியல் மயப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்கள்.
ஆகவே உள்நாட்டின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், படைவீரர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று வலிந்து நிற்கின்ற நிலையிலும் சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றின் ஊடாகவே செம்மணி படுகொலைகள் உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்றார்.





