லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு பிணை
சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரக்கை வாசித்து காட்டப்பட்டதை அடுத்து, சந்தேகநபரிடம் கையளிக்கப்பட்டது.
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபரிடம் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு, நவம்பர் 19 ஆம் திகதி 11 பத்திரிக்கைகளை மேலதிகமாக வெளியிடுவதுக்காக, இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு 1,748,877.76 ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவிந்துள்ளது.
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, 17 இலட்சத்துக்கும் அதிக தொகையை அரசாங்கத்திற்கு நட்டப்படுத்தியமை ஊடாக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக குறிப்பிட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றை தினம் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் , சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரக்கை வாசித்து காட்டப்பட்டதை அடுத்து, சந்தேகநபரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதி சந்தேகநபரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு பிணைவழங்கி உத்தரவிட்டார்.





