கொலம்பியா நிலநடுக்கம்: உயிரிழப்பு 200-ஐக் கடந்தது
நிலநடுக்கத்தின் முழுமையான பாதிப்பு இன்னும் தெரியவராத நிலையில், அவசரகால மீட்புக் குழுக்கள் களமிறங்கியுள்ளன.
மேற்கு கொலம்பியாவின் காபி உற்பத்திப் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 1,500 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதையடுத்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையங்கள், சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சவாலாகியுள்ளன. சேதமடைந்த பகுதிகளில் குடும்பங்கள் தங்களது உறவினர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நிலநடுக்கத்தின் முழுமையான பாதிப்பு இன்னும் தெரியவராத நிலையில், அவசரகால மீட்புக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. மருத்துவ உதவி, தங்குமிடம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க சர்வதேச உதவிகளும் திரட்டப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மற்றும் இன்டர்-அமெரிக்கன் டெவலப்மென்ட் வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர் அளவில் உதவி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





