மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த யாழ்ப்பாணத்தில் புதிய செயலணி ஸ்தாபிப்பு
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் ஏற்படாத வகையில் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.
ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் ஏற்பாட்டில், மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலும், மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபார தடுப்பு செயலணி ஸ்தாபிக்கும் நிகழ்வும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் பணிக்குழுவின் செயலாளரும், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி திருமதி பிரியங்கனி ஹேவரத்ன மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி அனோஜா முனசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது கருத்துரையாற்றிய அரசாங்க அதிபர் , தேசிய ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாரத்துக்கு எதிரான செயலணியின் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இச் செயலணியின் தேசிய செயலாளராக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கடமையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், மனிதக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் அவசியமாகக் கருதப்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அரசாங்க அதிபர், அதன் தொடர்ச்சியாக மாவட்ட செயலணியை நிறுவுவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாக கிராம அலுவலர்கள் உள்ளிட்டோருக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதாகவும், அதன் தொடர்ச்சியாக மாவட்ட செயலணியில் அங்கத்துவம் வகிக்கவுள்ள உத்தியோகத்தர்கள் இக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மனிதவள அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் பெண்கள் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் மனிதக் கடத்தல் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் உத்தியோகத்தர்களும் இக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாவட்ட ரீதியில் செயல்திறன் மிக்க ஒரு செயலணியினை நிறுவ வேண்டிய அவசியம் தற்போது காணப்படுவதாகவும், அதற்கான முக்கியமான ஆரம்ப கட்டமாக இன்றைய கலந்துரையாடல் அமைகின்றது என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
தேசிய மட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாரத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆதரவு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதும் செயலணியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் ஏற்படாத வகையில் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.
பிரதேச மட்ட அதிகாரிகள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயபட்டாலேயே மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாரத்தைத் தடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாக கிராம அலுவலர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மனிதவள அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி, பெண்கள் அபிவிருத்தி, சிறுவர் உரிமை மேம்பாடு, முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உள்ளிட்ட துறைசார்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





