ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளய்வுக்கு அமைச்சரவை உபகுழு
இந்த உபகுழுவில் மேலும் எட்டு அமைச்சுக்களின் பிரதிநிதிகளும் அங்கத்துவம் வகிக்கவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கான புதிய விண்ணப்பத்தை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இந்தக் குழுவின் இணைத் தலைமைகளாகச் செயற்படவுள்ளன.
இந்த வரிச்சலுகையைப் பெறுவதற்கு இலங்கை இதுவரை மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய நான்கு முக்கிய பிரிவுகளின் கீழ் 27சர்வதேச உடன்பாடுகளுக்கு இணங்கச் செயற்பட வேண்டியிருந்தது.
ஆனால், அடுத்த கட்ட சுழற்சிக்காக மேலும் ஐந்து புதிய உடன்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் ஒற்றை உடன்படிக்கை
மனதை மாற்றும் பொருட்கள் பற்றிய உடன்படிக்கை, போதைமருந்து மற்றும் மனதை மயக்கும் பொருட்கள் கடத்தலை தடுப்பதற்கான உடன்படிக்கை, ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சமவாயம் ஆகிய ஐந்து நிபந்தனைகளுக்கே இலங்கையானது இணங்க வேண்டியுள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் விண்ணப்பம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இந்த வாரம் சமர்ப்பித்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கமையவும் இலங்கை செயற்படுகிறதா என்பதை ஆராய்ந்து இந்தச் சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்காகவே இந்த அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த உபகுழுவில் மேலும் எட்டு அமைச்சுக்களின் பிரதிநிதிகளும் அங்கத்துவம் வகிக்கவுள்ளனர். தற்போது நடைமுறையிலுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் திட்டமானது எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதால், இலங்கை தனது புதிய விண்ணப்பத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுடைய வளரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் முன்னுரிமை அணுகலை இந்த ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்குகிறது என்றபோதிலும், சர்வதேச மாநாடுகளைத் தொடர்ச்சியாகவும் வினைத்திறனாகவும் நடைமுறைப்படுத்துவதிலேயே இதற்கான நன்மை தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





