ராஜபக்ஷர்கள் நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது - பிரதி அமைச்சர் மஹிந்த
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன பிரதம நீதியரசரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன பிரதம நீதியரசரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் முற்றிலும் தவறாகும். இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு என்ன? நீதித்துறையை அரசியல்மயப்படுத்திய ராஜபக்ஷர்கள் இன்று நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-08-2026 அன்று நடைபெற்ற பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபைக்கு வருகிறார், சிறிது நேரம் பேசுகிறார். அதற்கு பதிலளிக்க முற்படும் போது சபையில் இருந்து ஓடி விடுகிறார்.இதனையே பழக்கமாக கொண்டுள்ளார். நீதித்துறையின் சுதந்திரம் பற்றி நாமல் ராஜபக்ஷ பேசுகிறார்.இவரது அரசாங்கம் 2013 ஆம் ஆண்டு அப்போதைய பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை சட்டவிரோதமான முறையில் பதவி நீக்கியதை நாட்டு மக்கள் மறக்கவில்லை.
ராஜபக்ஷர்கள் நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்தியதையும், அழுத்தம் பிரயோகித்ததையும் நாட்டு மக்கள் மறக்கவில்லை.தாஜூதீன் படுகொலையை மறக்கடிக்கச் செய்ய நாமல் ராஜபக்ஷ முயற்சிக்கிறார். ஆனால் நாட்டு மக்கள் அதனை மறக்க போவதில்லை.வெள்ளை ஆடை அணிந்த குற்றவாளி இவர் இன்று நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள். இவர்கள் தான் வெள்ளை வேன் கலாசாரத்தை உருவாக்கினார்கள்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தபோது பாம்பு கடித்து விட்டதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சியின் உறுப்பினர் இன்று நீதித்துறையின் சுதந்திரம் பற்றி பேசுகிறார். அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் தனி நபரை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல, நீதிமன்ற கட்டமைப்பை நடைமுறைக்கு சாதகமான வகையில் மாற்றியமைப்பதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன பிரதம நீதியரசரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் முற்றிலும் தவறாகும்.இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு என்ன ? ரோஹிணி கவிரத்னவின் கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.இன்று இந்த இரு தரப்பும் ஒன்றிணைந்து செயற்படுகிறார்கள் என்றார்.





